Tuesday, September 10, 2019

சாபம்



சாபம் (சிறுகதை )

நன்றி குங்குமம் வார இதழ் (13/09/2019 )


சில வருடங்களுக்குமுன் ஒரு தனியார் வங்கியின் கடனட்டை விற்க்கும் பணிப்பிரிவில் ஊதியஉயர்வுடன் கூடிய  பணிமாறுதல் பெற்று எங்களூரிலிருந்து அம்மாநகருக்கு வந்து சேர்ந்தேன். 
"தம்பி பேச்சுலர் தான?..." 
" சுவத்துல ஆணிஅடிக்க கூடாது"
"5 ந் தேதி வாடக கேக்காம கொடுத்துறணும் …"
"விருந்தாளிக வந்தா 2 நாளைக்கு மேல தங்கக்கூடாது …"
" அதெல்லாம் எந்த பிரச்சையும் இருக்காது சார் ….."

வாடகை வீட்டிற்க்கே உரிய உலகப்பொது விதிமுறையுடன், கட்டுபடியாகும் வாடகைக்கு ஒரு முதல்தளவீட்டையும் தேடி விரைவில் குடியேறினேன். அவ்வீட்டில் என் படுக்கையறையின்  மேற்க்கே ஜன்னலை ஒட்டினாற்போல் நானிருக்கும்  முதல்தளஉயரத்திற்கு கிளைபரப்பி ஒரு வேப்பமரம் நின்றிருந்தது, பக்கத்துக்கு வீட்டின் காலி நிலத்தில் வேர்விட்டு கிளைபரப்பி கம்பிரமாக வளர்ந்திருந்தது,  வேப்பமரத்தின் பசுமையும் குளுமையும் முதல் நாளிலிருந்தே எனக்கு பிடித்துப்போனது, உச்சிவெயிலுக்குபின்னான பொழுதுகளில் என் அறையின் சுவற்றிலும், ஜன்னலிலும் படியவிருந்த சூரியனின் உக்கிரத்தை தடுக்கத்தோதுவாய்  தன் கிளைகளை  பரவவிட்டிருந்தது.

குடிவந்த சிலமாதங்களில் அந்த ஆண்டுக்குரிய கோடை துவங்கியது, நகரின் தலைக்கு மேல் சூரியனை கட்டி தொங்கவிட்டது போல கோடையின் துவக்கத்திலிருந்தே வெந்தும் தணியாத தணலாக கொதிப்பேறிப்போயிருந்தது நகரம். ஒவ்வொரு கோடையிலும் துளி மழைக்கு கூட வாய்ப்பற்று, நரகத்தின் நெருப்பு நிலச்சாயல் படிந்துவிடும்போல  இந்நகருக்கு. விற்பனை பிரதிநிதியான நானும், கண்டு, கேட்டு, உண்டு, நுகர்ந்து, தொட்டறியும் ஐம்புலனும் வெக்கை தேக்கி மாலை வீடு சேருவேன். குளித்து என்னை புதுப்பிக்க நினைத்து குழாயை திறந்தால் நெருப்பே நீர்வடிவில் கொட்டிக்கொண்டிருக்கும்

அந்த கோடைதான் அவ்வேம்பின் பேரருமையை எனக்கு சொன்னது,  மாலையில் அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகளெல்லாம் வீடுகளில் புழுக்கம் தாளாது மொட்டைமாடிக்கும், தெருமுனை பூங்காவிற்கும் இடம்பெயர்வார்கள், பகலில் உள்வாங்கிய சூரியசூட்டை மாலையில் வீடுகளின் சுவர்கள் வெக்கையாக வெளித்தள்ளும், உட்கொண்ட வெப்பத்தை நீண்ட பொழுது தேக்கி வைத்திருப்பதில் உருளைக்கிழங்கை போலத்தான் கான்கிரீட் கட்டிடங்களும்.   ஆனால் என் படுக்கையறையில் மட்டும் வெக்கையை உணரமுடியாது, காரணம் அந்த அறையின் வெளிச்சுவர் முழுவதும் வெயில் மறைத்து கிளைபரப்பி ஒவ்வொரு பகலிலும் சூரியனோடு சமர் புரியும் வேம்பு. அந்த நகரிலேயே வெக்கை போர்த்தாமல், புழுக்கம் படராதது, வேம்பின் கிளைகளுக்கிடையில் உறங்குவது நானாகத்தானிருக்கும். அதன் சிறுகிளைகளும் இலைகளும்  ஒன்றிரண்டு என் ஜன்னலை உரசியபடியிருக்கும், காற்றின் சிறு சலனத்திற்கு வேம்பின் கிளையெல்லாம் அசைந்து ஜன்னலின் வழி எப்படியும் வந்தடைந்துவிடும் ஒவ்வொருநாளும்  என்னை உறங்கவைக்கும் சிறுகுளிர் காற்று.  

ஓய்வு நேரங்களில்  ஜன்னலின் வழி அப்பெரும்மரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன், ஓர் நாள் ஜன்னலுக்கு நேரெதிரான கிளையில் காகம் ஒன்று வந்தமர்ந்து  சிறிது நேரம் கழிய சில அடிதூரம் மாறி மாறி அமர்ந்ததே தவிர அவ்விடம் அகலவில்லை, அதுவரை கைக்கிண்ணத்தில் உண்டுகொண்டிருந்த வேர்க்கடலை கொஞ்சம் எடுத்தது ஜன்னல் வெளிவிளிம்பில் வைத்து நான் சற்று நகர பாதுகாப்பு தூரம் கணக்கிட்டு ஜன்னல் அமர்ந்து கடலைகளை தின்று தீர்த்து பறந்தது  அடுத்ததடுத்து சில நாட்களிலும் தொடர்ந்தது கடலைக்கு பதில் மிச்சர், பொரி, சோறு என மாறியது, ஆச்சர்யாமாக இருக்கும் எங்கிருந்து வருகிறது என தெரியாது அனால் ஒவ்வொரு காலையும் ஜன்னலருகில் அமர்ந்து நான் உணவுண்ணும் நேரம் சரியாக வந்து இரையெடுத்து பின் மறைந்துவிடும், சில தினங்களில் உடன் ஒரு காகமும் வந்தமர்ந்து அம்மரக்கிளையில் பார்த்தவுடன் ஒரு தடுமாற்றம் எது நம்மவன் ?
பார்த்தவுடன் காகங்களுக்கு வேறுபாடு கண்டுணர முடியாதுதானே ?
ஊருக்குள் சுற்றும் காகங்கள் ஏன் எல்லாம் ஓன்றுபோலிருக்கிறது?
உருவ பருமன் வித்தியாசத்தை வைத்து சில கனத்தில் நம்மவனை கண்டுகொண்டேன் , புதிய காகத்தை காட்டிலும் சற்று பருமனாக. புது துணை பிடித்திருக்கிறது. அதன் பின் இருக்ககத்திற்கும் தலா ஒவ்வொரு கை சோறிட துவங்கினேன் 
சில சமயம் கைகளில் இரையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே நீட்டுவேன் வளர்ப்பு கிளிகளை போல் வந்தது கொத்தி தின்னுமென்ற கற்பனையில் காக்கைகள் மனிதனை ஒருபோதும் நம்புவதில்லை போலும் ஒருமுறை கூட நெருங்கியதில்லை
உண்டபின் அந்த மரத்தின் மற்ற கிளைகளிலும் சற்று நீண்டநேரம் பறந்தமர துவங்கின ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் திரும்பி வந்து ஜன்னல் திறந்து நோட்டமிட்டேன் காகங்களை காணவில்லை நீண்டநாள் பூட்டிக்கிடந்ததால் தூசு படிந்த வீட்டை ஓரளவு சுத்தம் செய்து அந்த வார விகடனுடன் ஜன்னலருகே ஓய்ந்து அமர்ந்தபோதுதான் கவனித்தேன், வாயில் சிறு சுள்ளியை கவ்வியபடி அம்மரத்தில் ஒரு மூன்று கிளைபிரிவின் மையத்தில் ஏற்கனவே கட்டுமானத்திலிருந்த ஒரு கூட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தது. என்னை சட்டை செய்யவில்லை  கொண்டுவந்த சுள்ளியை வாகாக கூட்டில் சொருகிவிட்டு பறந்தது, சிறிது நேரத்தில் இரண்டாவதும் பறந்து வந்து ஒரு வைக்கோலை கூட்டில் கிடத்தைப்போனது, சில தினங்களிலியேயே இரண்டும் கூடி ஒரு நேர்த்தியான கூட்டை விரைந்து கட்டின. தினமும் நான் வைக்கும் இரையையும் நீரையும் எடுத்துக்கொண்டாலும் நீண்ட நேரம் ஓய்ந்து கிளைகளில் அமர்வதில்லை  அவ்வளவு துரித வேலைக்கு கரணம் சில நாட்களில் தெரிந்து விட்டது, பெண்காகம் முட்டையிட்டு அடைகாத்து கூட்டிலேயே அமர்ந்து கொண்டது, பூனைகளைப்போல் காக்கைகளின் கூடல் நிமித்தங்களும் ரகசியமானவை, காக்கைகளின் புணர்தல் நிமித்தங்கள் யாரும் அறிந்துவிடமுடியாதவை. ஆண்காகம் இணைதேடிக்கூடி துணை முட்டையிடும் பருவம் நெருங்குவதை உணர்ந்து ஒரு கூட்டை கட்டியமர்த்திக்  கொண்டது. இந்த பெருநகரத்தில் என் கண்ணப்பார்வைக்கிணையான தூரத்தில் ஒரு புள்ளினம் குடும்பமாவது கண்டு மனம் மகிழ்ந்தது 

அந்த பருவமும் ஒரு கடும்கோடைதான், இந்த அக்னிக்கு ஊர் பக்கம் ஓரெட்டு போய்வரலாமென அன்றைய பகலில் தயாராகிக்கொண்டிருந்தேன், ஜன்னலருகே டப்... டப்... மரக்கிளைகள் வெட்டப்படும் ஓசை கேட்டது , எப்போதும் மழைக்காலங்களில்தான் அந்நிலத்தின் உரிமையாளர் அம்மரத்தின் மிதம்மிஞ்சிய கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்தி வைத்திருப்பார், ஆனால் இந்த கடும்கோடையில் இதன்ன சத்தம் ? ஜன்னல் திறந்து பார்த்தேன் மூர்க்கமாக ஒருவன் மரத்தின் பிற கிளைகளை மையக்கிளைகளின் அடிவரை வெட்டி மண்ணில் வீழ்த்திக்கொண்டிருந்தான் அதிர்ச்சியாக இருந்தது இது வழக்கமான கிளை ஒழுங்குக்கான வெட்டாக தெரியவில்லை பார்த்துக்கொண்டியூர்க்கும்போதே மரத்தின் அனைத்து கிளைகளையும் கொப்பு களையும் ஒன்றுவிடாமல் மண்ணில் சரித்திருந்தான்  இறுதியாக காகத்தின் கூடிருக்கும் கொப்பின் மீதேறி கிளையை வெட்டத்துவங்கியவன் காக்கை கூட்டை கண்டவனாக கீழே நின்றிருந்த உரிமையாளரிடம் 
" சார் காக்க கூடு ஒன்னிருக்கு... "
"தள்ளிவிடுயா.." 
"இல்லசார்... அதுல ஒரு புதுசா பொரிஞ்ச குஞ்சு ஒன்னிருக்கு …"
சரி அந்த நுனிக்கொப்ப விட்டுட்டு மிச்சத்த வெட்டி வேலைய வெரசா முடி…"
கேட்டவுடன் வெறும் கூட்டை விட்டுவிட்டு மீதிருக்கும் கிளைகளை வெட்டத்துவங்கினான் 
கூட்டிலிருங்கும் காக்கைக்குஞ்சு வாயை மேலநோக்கி திறந்து கத்திக்கொண்டிருந்தது இன்னும் முழுவதும் வளராத இறகுகொண்ட அதன் உடல் அந்த சிறுகூட்டுக்குள் நடுங்கிதுடித்துக்கொண்டிருந்தது, இரு பெரும் காகங்களும் தீவிரமாக கரைந்துகொண்டு அந்த கிளைமேல் மரவெட்டியின் தலைக்குமேல் இறக்கையால் தாக்குவதுபோல் தாழப்பறந்து கொண்டேயிருந்தது, மரவெட்டியின் உதவியாளன் ஒரு கிளை கொண்டு அதனை விரட்ட,  இரு காகமும் அருகேயுள்ள வீடுகளின் மீதும் மின்கம்பிகள் மீதும் பதற்றத்துடன் மாறி  மாறி  அமர்ந்துகொண்டிருந்தது 

எனக்கு எனன செய்வதென்று தெரியவில்லை, உடனே மொட்டை மாடி வழியாக சென்று மேலிருந்த்து பார்த்தேன், அதற்குள் மரவெட்டி அம்மரத்தின் மூன்று பெருங்கிளைகள் தவிர்த்து ஒரு இலை கூட விட்டு வைக்காமல் பிற கிளைகளை மண்னில் வீழ்த்தி அவனும் கீழிறங்கியிருந்தான் கடும் வெயிலில் ஒற்றை கிளை மறைவு கூடஅற்று கிளையில் அபாயகர விளிம்பில் அந்த குஞ்சு கதறிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும் கேட்டது. மொட்டை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த என்னையும் அந்த இரு காகங்களுக்கு தலையை கொத்திவிடுவதுபோல் உரசி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது  ரயில் நிலையத்தில் காத்திருந்த நண்பன் போன் செய்து
 " இன்னும் ஒருமணி நேரத்தில் ட்ரெயின் கிளம்பப்போகுது இன்னும் வீடு விடலயா …".
அவைகளுக்கு எப்படி உதவுது என தெரியவில்லை  வேறு வழியின்றி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். ஒருவாரம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தாலும் மனமெல்லாம் காக்கை கூட்டின்மீதும் அதன் குடும்பத்தின் மீதிருந்து ஒரு வாரத்திற்கு பின் திரும்ப வந்ததும் முதலில் ஓடிச்சென்று ஜன்னல் திறந்து கூடிருந்த கிளையை பார்த்தேன். கூடு சிதைந்து கிளையில் ஒருபுறம் சரிந்தவாறு தொங்கிக்கொண்டிருந்தது.  எங்கு போனது அந்த காக்கைகள் , குஞ்சு அதற்குள் பறக்க பழகி தப்பிருக்குமா?  வேறு பறவைகள் வேட்டையாடியிருக்குமா? இந்த கடும்கோடை தாளாது கருகிமண்டிருக்குமா?  சில நாட்களில் தொங்கிக்கொண்டிருந்த கூடும் அடித்த ஒரு காற்றில் கீழேவிழுந்த்து சிதறிப்போனது 

பின் பருவமழைக்காலம் துவங்கியது அதன் பின்புதான் கவனித்தேன் அந்த மரத்திலிருந்து எந்தவொரு கிளையும் இலையும் துளிர்க்கவில்லை  சில பல நாட்களில் வீட்டுக்காரரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து வருத்தத்துடன் பார்த்து விட்டு "நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம்தான, எப்ப வெட்டிவிட்டாலும் துளுத்துருமே இந்தவட்டம் என்னாச்சு…….." என புலம்பிக்கொண்டிருந்தார்  அந்த வேம்பு தழைக்காததால் அவ்விடத்தை சுற்றிய பகுதிகளில் வெக்கை பெருகத்  துவங்கியது. அவிவிடத்தின் உரிமையாளர் அடுத்து ஒரு மூன்று மாதம் பொறுத்து பார்த்தார் பின்னொருநாள் பலத்த மரம் வெட்டும் ஓசை கேட்டது ஜன்னல் திறந்து பார்த்தேன், அன்றொருநாள் கிளைவெட்டிய மரவெட்டிகள் இருவர் இன்று மொத்த மரத்தையும் துண்டு துண்டாக அடிவரை வெட்டி கட்டைகளாக மண்ணில் சரித்துக்கொண்டிருந்தார்கள் 
"நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம் எப்படி மொட்டையாச்சு முத்து…?" 
நாடு மரத்தின் உச்சியில் மேல்நோக்கியபடியிருந்த ஒரு சுமாரான ஆனால் ஆழமான துளையொன்றை காட்டி "மழைத்தண்ணி மேலருந்து போயிருக்குள அதுதான் ஏதோ சீக்கடுச்சுருச்சு…." என்று கதை அளந்துகொண்டிருந்தான் மரவெட்டி மரத்தை முழுவதும் கட்டையாகி சாலையோரத்தில் அடுக்கிவைத்து ட்ராக்ட்டர் எடுத்து வருவதாக சென்றுவிட்டான்.வீட்டின் உரிமையாளர் ஒருமுறை மரக்கட்டைகளை ஆழ்ந்த இழப்பின் பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தார்  அப்போது இரு காக்கைகள் எங்கிருந்தோ பறந்து வந்து, வீழ்ந்து கிடந்த மரத்தின் மீதமர்ந்தன எனக்கு நன்குதெரியும் அவை இம்மரத்தில் கூடுகட்டி வாசித்த என் சிநேக காகங்கள்தான். ஆனால் அவைகளுடன் மூன்றாவதான அந்த குஞ்சுக்காகம் இல்லை. அம்மரக்கட்டைகள் மீது இங்குமங்கும் தாவியமர்ந்து மீண்டும் பறக்கத்துவங்கின. அன்றிலிருந்து அக்காக்கைகளின் சாபமே ஒரு அரூபநிழலாய் மரமற்ற அவ்வெளியில்  படரத்தொடங்கியது.

யா. பிலால் ராஜா

2 comments:

  1. மரத்தின் அருமையும் மனிதாபிமானம் முக்கியமும் அருமையாக சொல்லி இருக்கிறார். வாழ்த்துக்கள் பிலால்.

    ReplyDelete
  2. இந்த உலகம் எல்லோருக்குமான ஒன்று என்று புரிய வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete