Tuesday, September 10, 2019

சாபம்



சாபம் (சிறுகதை )

நன்றி குங்குமம் வார இதழ் (13/09/2019 )


சில வருடங்களுக்குமுன் ஒரு தனியார் வங்கியின் கடனட்டை விற்க்கும் பணிப்பிரிவில் ஊதியஉயர்வுடன் கூடிய  பணிமாறுதல் பெற்று எங்களூரிலிருந்து அம்மாநகருக்கு வந்து சேர்ந்தேன். 
"தம்பி பேச்சுலர் தான?..." 
" சுவத்துல ஆணிஅடிக்க கூடாது"
"5 ந் தேதி வாடக கேக்காம கொடுத்துறணும் …"
"விருந்தாளிக வந்தா 2 நாளைக்கு மேல தங்கக்கூடாது …"
" அதெல்லாம் எந்த பிரச்சையும் இருக்காது சார் ….."

வாடகை வீட்டிற்க்கே உரிய உலகப்பொது விதிமுறையுடன், கட்டுபடியாகும் வாடகைக்கு ஒரு முதல்தளவீட்டையும் தேடி விரைவில் குடியேறினேன். அவ்வீட்டில் என் படுக்கையறையின்  மேற்க்கே ஜன்னலை ஒட்டினாற்போல் நானிருக்கும்  முதல்தளஉயரத்திற்கு கிளைபரப்பி ஒரு வேப்பமரம் நின்றிருந்தது, பக்கத்துக்கு வீட்டின் காலி நிலத்தில் வேர்விட்டு கிளைபரப்பி கம்பிரமாக வளர்ந்திருந்தது,  வேப்பமரத்தின் பசுமையும் குளுமையும் முதல் நாளிலிருந்தே எனக்கு பிடித்துப்போனது, உச்சிவெயிலுக்குபின்னான பொழுதுகளில் என் அறையின் சுவற்றிலும், ஜன்னலிலும் படியவிருந்த சூரியனின் உக்கிரத்தை தடுக்கத்தோதுவாய்  தன் கிளைகளை  பரவவிட்டிருந்தது.

குடிவந்த சிலமாதங்களில் அந்த ஆண்டுக்குரிய கோடை துவங்கியது, நகரின் தலைக்கு மேல் சூரியனை கட்டி தொங்கவிட்டது போல கோடையின் துவக்கத்திலிருந்தே வெந்தும் தணியாத தணலாக கொதிப்பேறிப்போயிருந்தது நகரம். ஒவ்வொரு கோடையிலும் துளி மழைக்கு கூட வாய்ப்பற்று, நரகத்தின் நெருப்பு நிலச்சாயல் படிந்துவிடும்போல  இந்நகருக்கு. விற்பனை பிரதிநிதியான நானும், கண்டு, கேட்டு, உண்டு, நுகர்ந்து, தொட்டறியும் ஐம்புலனும் வெக்கை தேக்கி மாலை வீடு சேருவேன். குளித்து என்னை புதுப்பிக்க நினைத்து குழாயை திறந்தால் நெருப்பே நீர்வடிவில் கொட்டிக்கொண்டிருக்கும்

அந்த கோடைதான் அவ்வேம்பின் பேரருமையை எனக்கு சொன்னது,  மாலையில் அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகளெல்லாம் வீடுகளில் புழுக்கம் தாளாது மொட்டைமாடிக்கும், தெருமுனை பூங்காவிற்கும் இடம்பெயர்வார்கள், பகலில் உள்வாங்கிய சூரியசூட்டை மாலையில் வீடுகளின் சுவர்கள் வெக்கையாக வெளித்தள்ளும், உட்கொண்ட வெப்பத்தை நீண்ட பொழுது தேக்கி வைத்திருப்பதில் உருளைக்கிழங்கை போலத்தான் கான்கிரீட் கட்டிடங்களும்.   ஆனால் என் படுக்கையறையில் மட்டும் வெக்கையை உணரமுடியாது, காரணம் அந்த அறையின் வெளிச்சுவர் முழுவதும் வெயில் மறைத்து கிளைபரப்பி ஒவ்வொரு பகலிலும் சூரியனோடு சமர் புரியும் வேம்பு. அந்த நகரிலேயே வெக்கை போர்த்தாமல், புழுக்கம் படராதது, வேம்பின் கிளைகளுக்கிடையில் உறங்குவது நானாகத்தானிருக்கும். அதன் சிறுகிளைகளும் இலைகளும்  ஒன்றிரண்டு என் ஜன்னலை உரசியபடியிருக்கும், காற்றின் சிறு சலனத்திற்கு வேம்பின் கிளையெல்லாம் அசைந்து ஜன்னலின் வழி எப்படியும் வந்தடைந்துவிடும் ஒவ்வொருநாளும்  என்னை உறங்கவைக்கும் சிறுகுளிர் காற்று.  

ஓய்வு நேரங்களில்  ஜன்னலின் வழி அப்பெரும்மரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன், ஓர் நாள் ஜன்னலுக்கு நேரெதிரான கிளையில் காகம் ஒன்று வந்தமர்ந்து  சிறிது நேரம் கழிய சில அடிதூரம் மாறி மாறி அமர்ந்ததே தவிர அவ்விடம் அகலவில்லை, அதுவரை கைக்கிண்ணத்தில் உண்டுகொண்டிருந்த வேர்க்கடலை கொஞ்சம் எடுத்தது ஜன்னல் வெளிவிளிம்பில் வைத்து நான் சற்று நகர பாதுகாப்பு தூரம் கணக்கிட்டு ஜன்னல் அமர்ந்து கடலைகளை தின்று தீர்த்து பறந்தது  அடுத்ததடுத்து சில நாட்களிலும் தொடர்ந்தது கடலைக்கு பதில் மிச்சர், பொரி, சோறு என மாறியது, ஆச்சர்யாமாக இருக்கும் எங்கிருந்து வருகிறது என தெரியாது அனால் ஒவ்வொரு காலையும் ஜன்னலருகில் அமர்ந்து நான் உணவுண்ணும் நேரம் சரியாக வந்து இரையெடுத்து பின் மறைந்துவிடும், சில தினங்களில் உடன் ஒரு காகமும் வந்தமர்ந்து அம்மரக்கிளையில் பார்த்தவுடன் ஒரு தடுமாற்றம் எது நம்மவன் ?
பார்த்தவுடன் காகங்களுக்கு வேறுபாடு கண்டுணர முடியாதுதானே ?
ஊருக்குள் சுற்றும் காகங்கள் ஏன் எல்லாம் ஓன்றுபோலிருக்கிறது?
உருவ பருமன் வித்தியாசத்தை வைத்து சில கனத்தில் நம்மவனை கண்டுகொண்டேன் , புதிய காகத்தை காட்டிலும் சற்று பருமனாக. புது துணை பிடித்திருக்கிறது. அதன் பின் இருக்ககத்திற்கும் தலா ஒவ்வொரு கை சோறிட துவங்கினேன் 
சில சமயம் கைகளில் இரையை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே நீட்டுவேன் வளர்ப்பு கிளிகளை போல் வந்தது கொத்தி தின்னுமென்ற கற்பனையில் காக்கைகள் மனிதனை ஒருபோதும் நம்புவதில்லை போலும் ஒருமுறை கூட நெருங்கியதில்லை
உண்டபின் அந்த மரத்தின் மற்ற கிளைகளிலும் சற்று நீண்டநேரம் பறந்தமர துவங்கின ஒரு நீண்ட விடுமுறைக்கு பின் திரும்பி வந்து ஜன்னல் திறந்து நோட்டமிட்டேன் காகங்களை காணவில்லை நீண்டநாள் பூட்டிக்கிடந்ததால் தூசு படிந்த வீட்டை ஓரளவு சுத்தம் செய்து அந்த வார விகடனுடன் ஜன்னலருகே ஓய்ந்து அமர்ந்தபோதுதான் கவனித்தேன், வாயில் சிறு சுள்ளியை கவ்வியபடி அம்மரத்தில் ஒரு மூன்று கிளைபிரிவின் மையத்தில் ஏற்கனவே கட்டுமானத்திலிருந்த ஒரு கூட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தது. என்னை சட்டை செய்யவில்லை  கொண்டுவந்த சுள்ளியை வாகாக கூட்டில் சொருகிவிட்டு பறந்தது, சிறிது நேரத்தில் இரண்டாவதும் பறந்து வந்து ஒரு வைக்கோலை கூட்டில் கிடத்தைப்போனது, சில தினங்களிலியேயே இரண்டும் கூடி ஒரு நேர்த்தியான கூட்டை விரைந்து கட்டின. தினமும் நான் வைக்கும் இரையையும் நீரையும் எடுத்துக்கொண்டாலும் நீண்ட நேரம் ஓய்ந்து கிளைகளில் அமர்வதில்லை  அவ்வளவு துரித வேலைக்கு கரணம் சில நாட்களில் தெரிந்து விட்டது, பெண்காகம் முட்டையிட்டு அடைகாத்து கூட்டிலேயே அமர்ந்து கொண்டது, பூனைகளைப்போல் காக்கைகளின் கூடல் நிமித்தங்களும் ரகசியமானவை, காக்கைகளின் புணர்தல் நிமித்தங்கள் யாரும் அறிந்துவிடமுடியாதவை. ஆண்காகம் இணைதேடிக்கூடி துணை முட்டையிடும் பருவம் நெருங்குவதை உணர்ந்து ஒரு கூட்டை கட்டியமர்த்திக்  கொண்டது. இந்த பெருநகரத்தில் என் கண்ணப்பார்வைக்கிணையான தூரத்தில் ஒரு புள்ளினம் குடும்பமாவது கண்டு மனம் மகிழ்ந்தது 

அந்த பருவமும் ஒரு கடும்கோடைதான், இந்த அக்னிக்கு ஊர் பக்கம் ஓரெட்டு போய்வரலாமென அன்றைய பகலில் தயாராகிக்கொண்டிருந்தேன், ஜன்னலருகே டப்... டப்... மரக்கிளைகள் வெட்டப்படும் ஓசை கேட்டது , எப்போதும் மழைக்காலங்களில்தான் அந்நிலத்தின் உரிமையாளர் அம்மரத்தின் மிதம்மிஞ்சிய கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்தி வைத்திருப்பார், ஆனால் இந்த கடும்கோடையில் இதன்ன சத்தம் ? ஜன்னல் திறந்து பார்த்தேன் மூர்க்கமாக ஒருவன் மரத்தின் பிற கிளைகளை மையக்கிளைகளின் அடிவரை வெட்டி மண்ணில் வீழ்த்திக்கொண்டிருந்தான் அதிர்ச்சியாக இருந்தது இது வழக்கமான கிளை ஒழுங்குக்கான வெட்டாக தெரியவில்லை பார்த்துக்கொண்டியூர்க்கும்போதே மரத்தின் அனைத்து கிளைகளையும் கொப்பு களையும் ஒன்றுவிடாமல் மண்ணில் சரித்திருந்தான்  இறுதியாக காகத்தின் கூடிருக்கும் கொப்பின் மீதேறி கிளையை வெட்டத்துவங்கியவன் காக்கை கூட்டை கண்டவனாக கீழே நின்றிருந்த உரிமையாளரிடம் 
" சார் காக்க கூடு ஒன்னிருக்கு... "
"தள்ளிவிடுயா.." 
"இல்லசார்... அதுல ஒரு புதுசா பொரிஞ்ச குஞ்சு ஒன்னிருக்கு …"
சரி அந்த நுனிக்கொப்ப விட்டுட்டு மிச்சத்த வெட்டி வேலைய வெரசா முடி…"
கேட்டவுடன் வெறும் கூட்டை விட்டுவிட்டு மீதிருக்கும் கிளைகளை வெட்டத்துவங்கினான் 
கூட்டிலிருங்கும் காக்கைக்குஞ்சு வாயை மேலநோக்கி திறந்து கத்திக்கொண்டிருந்தது இன்னும் முழுவதும் வளராத இறகுகொண்ட அதன் உடல் அந்த சிறுகூட்டுக்குள் நடுங்கிதுடித்துக்கொண்டிருந்தது, இரு பெரும் காகங்களும் தீவிரமாக கரைந்துகொண்டு அந்த கிளைமேல் மரவெட்டியின் தலைக்குமேல் இறக்கையால் தாக்குவதுபோல் தாழப்பறந்து கொண்டேயிருந்தது, மரவெட்டியின் உதவியாளன் ஒரு கிளை கொண்டு அதனை விரட்ட,  இரு காகமும் அருகேயுள்ள வீடுகளின் மீதும் மின்கம்பிகள் மீதும் பதற்றத்துடன் மாறி  மாறி  அமர்ந்துகொண்டிருந்தது 

எனக்கு எனன செய்வதென்று தெரியவில்லை, உடனே மொட்டை மாடி வழியாக சென்று மேலிருந்த்து பார்த்தேன், அதற்குள் மரவெட்டி அம்மரத்தின் மூன்று பெருங்கிளைகள் தவிர்த்து ஒரு இலை கூட விட்டு வைக்காமல் பிற கிளைகளை மண்னில் வீழ்த்தி அவனும் கீழிறங்கியிருந்தான் கடும் வெயிலில் ஒற்றை கிளை மறைவு கூடஅற்று கிளையில் அபாயகர விளிம்பில் அந்த குஞ்சு கதறிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும் கேட்டது. மொட்டை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த என்னையும் அந்த இரு காகங்களுக்கு தலையை கொத்திவிடுவதுபோல் உரசி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது  ரயில் நிலையத்தில் காத்திருந்த நண்பன் போன் செய்து
 " இன்னும் ஒருமணி நேரத்தில் ட்ரெயின் கிளம்பப்போகுது இன்னும் வீடு விடலயா …".
அவைகளுக்கு எப்படி உதவுது என தெரியவில்லை  வேறு வழியின்றி வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு கிளம்பினேன். ஒருவாரம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தாலும் மனமெல்லாம் காக்கை கூட்டின்மீதும் அதன் குடும்பத்தின் மீதிருந்து ஒரு வாரத்திற்கு பின் திரும்ப வந்ததும் முதலில் ஓடிச்சென்று ஜன்னல் திறந்து கூடிருந்த கிளையை பார்த்தேன். கூடு சிதைந்து கிளையில் ஒருபுறம் சரிந்தவாறு தொங்கிக்கொண்டிருந்தது.  எங்கு போனது அந்த காக்கைகள் , குஞ்சு அதற்குள் பறக்க பழகி தப்பிருக்குமா?  வேறு பறவைகள் வேட்டையாடியிருக்குமா? இந்த கடும்கோடை தாளாது கருகிமண்டிருக்குமா?  சில நாட்களில் தொங்கிக்கொண்டிருந்த கூடும் அடித்த ஒரு காற்றில் கீழேவிழுந்த்து சிதறிப்போனது 

பின் பருவமழைக்காலம் துவங்கியது அதன் பின்புதான் கவனித்தேன் அந்த மரத்திலிருந்து எந்தவொரு கிளையும் இலையும் துளிர்க்கவில்லை  சில பல நாட்களில் வீட்டுக்காரரும் மரத்தை சுற்றி சுற்றி வந்து வருத்தத்துடன் பார்த்து விட்டு "நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம்தான, எப்ப வெட்டிவிட்டாலும் துளுத்துருமே இந்தவட்டம் என்னாச்சு…….." என புலம்பிக்கொண்டிருந்தார்  அந்த வேம்பு தழைக்காததால் அவ்விடத்தை சுற்றிய பகுதிகளில் வெக்கை பெருகத்  துவங்கியது. அவிவிடத்தின் உரிமையாளர் அடுத்து ஒரு மூன்று மாதம் பொறுத்து பார்த்தார் பின்னொருநாள் பலத்த மரம் வெட்டும் ஓசை கேட்டது ஜன்னல் திறந்து பார்த்தேன், அன்றொருநாள் கிளைவெட்டிய மரவெட்டிகள் இருவர் இன்று மொத்த மரத்தையும் துண்டு துண்டாக அடிவரை வெட்டி கட்டைகளாக மண்ணில் சரித்துக்கொண்டிருந்தார்கள் 
"நல்லா வளந்துக்கிட்டிருந்த மரம் எப்படி மொட்டையாச்சு முத்து…?" 
நாடு மரத்தின் உச்சியில் மேல்நோக்கியபடியிருந்த ஒரு சுமாரான ஆனால் ஆழமான துளையொன்றை காட்டி "மழைத்தண்ணி மேலருந்து போயிருக்குள அதுதான் ஏதோ சீக்கடுச்சுருச்சு…." என்று கதை அளந்துகொண்டிருந்தான் மரவெட்டி மரத்தை முழுவதும் கட்டையாகி சாலையோரத்தில் அடுக்கிவைத்து ட்ராக்ட்டர் எடுத்து வருவதாக சென்றுவிட்டான்.வீட்டின் உரிமையாளர் ஒருமுறை மரக்கட்டைகளை ஆழ்ந்த இழப்பின் பார்வை பார்த்துவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தார்  அப்போது இரு காக்கைகள் எங்கிருந்தோ பறந்து வந்து, வீழ்ந்து கிடந்த மரத்தின் மீதமர்ந்தன எனக்கு நன்குதெரியும் அவை இம்மரத்தில் கூடுகட்டி வாசித்த என் சிநேக காகங்கள்தான். ஆனால் அவைகளுடன் மூன்றாவதான அந்த குஞ்சுக்காகம் இல்லை. அம்மரக்கட்டைகள் மீது இங்குமங்கும் தாவியமர்ந்து மீண்டும் பறக்கத்துவங்கின. அன்றிலிருந்து அக்காக்கைகளின் சாபமே ஒரு அரூபநிழலாய் மரமற்ற அவ்வெளியில்  படரத்தொடங்கியது.

யா. பிலால் ராஜா

Saturday, June 29, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும்



அத்தியாயங்களின் துவக்கத்தில்  மார்க்சின் புகழ் பெற்ற "மதம் ஒரு அபின் " சொற்றொடர் உள்ளடங்கிய ஓர் பக்கம்  இருக்கிறது, மறுபக்கம்  அம்பேத்கரின் மார்க்ஸ் சொன்னதற்கு முற்றிலும் எதிர் "பதங்களை" கொண்ட இன்னொரு பக்கம் இருக்கிறது, இந்த இருஅடுத்தடுத்த பக்கங்களுக்கிடையேயான கருத்தியல் தூரம்தான் தொடந்துவரும் 900+ பக்கங்கள்

முதலில் பாராட்டியாகவேண்டியது இந்நூலுக்கு பின்னாலுள்ள அபாரஉழைப்பை, வசுமித்ரவின்  20 ஆண்டுகால வாசிப்பை, கருத்தியல் கற்றலை இவ்வளவு கூர்மையாக இந்நூலுக்கு அடிப்படையாக வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பொதுவாக அரசியல் / கருத்தியல் சார்ந்த ஆய்வு நூலை வாசிப்பது பெரும் அலுப்பூட்டக்கூடியது, இவ்வகை எழுத்துக்கள் என்னளவில் இருவகை. ஒன்று வாசிப்பவரை உள்ளிழுக்கமால் தனித்து நிற்ப்பது ஒருவகை எனக்கொண்டால்,  வாசிப்பின் வழி நூலாசிரியர் வாசகனுடன் உரையாடுவது இரண்டாம் வகை, இந்நூல் நிச்சயம் இரண்டாம் வகை.

மார்க்சியம் / கம்யூனிசம் கற்றுக்கொள்ள, முழுப்பரிமாணத்தை புரிந்து கொள்ள நிச்சயம் வாழ்நாளில் ஒரு பகுதியை முற்றாக செலவழிக்க வேண்டும், அதைபோல் பௌத்த தத்துவங்களையும் அம்பேத்கரது படைப்புகளையும் குறைந்தபட்சம் வாசித்துஉணர காலத்தை மட்டுமல்ல மனதையும் அதன் பாதையில் எடுத்துசென்று அமர்த்த வேண்டும். வாசிப்பு ஒரு தவமாகமாறினாலொழிய இது வாய்ப்பில்லை, வசுவின் தவத்திற்கு வாய்த்திருக்கும் வரங்களில் ஒன்று இந்நூலெனக்கொள்வேன். இதனை மேற்சொன்ன தத்துவங்களைப்பற்றி  நுனிப்புல்மேய்ப்பாக வாசித்தறியமுயன்ற  ஒரு சராசரி வாசிப்பாளனாக அதனை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

அம்பேத்கர் என்ற பெயரை கேட்டவுடன் இன்று மேடைகளில்/ youtube பேச்சாளர்களின் தலித்அடையாள அரசியல் மற்றும் அது சார்ந்த  விவாதங்கள்தான் நம்முன் விரியும். பலகாலமாக பொதுசமூகத்திற்கு (பள்ளிவயதிலிருந்தே) அம்பேத்கர் இந்திய அரசியல் சட்ட மாமேதை எனவும் தாழ்த்தப்பட்ட சமூக விடுதலைக்கு அதை நோக்கிய போராட்டத்திற்கு இந்தியா முழுமைக்கு பெரும் புரட்சியை முன்னெடுத்தவர் எனதெரியும். சந்தேகமேயில்லாமல் இன்று அது பெரும்வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது, இதற்காக அவரின் பிம்பத்தை வைத்து அடையாள அரசியல் செய்வது கூட ஓரளவு தப்பில்லை என தோன்றுகிறது. காரணம் அச்சமூகம் காலங்காலமாக தன்னில் வாங்கியிருக்கும் வலிஅப்படி, அந்தந்த இடத்தில் வாழ்ந்ததால்தான் அதற்குரிய வலி புரியும். அடக்குமுறைக்கு உட்படும் எந்த சமூகமும் சரியோ தவறோ எவ்வழியிலாவது வெகுண்டெழுந்து கொண்டுதானிருக்கும்  இது ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அனைத்து சமூகத்திற்கும் பொது ....    சரி... அதெல்லாம் தனிப்பெரும் விவாததளம் இங்கு அது பற்றியல்ல.  இந்த தற்கால அரசியலை இந்நூல் பேசவில்லை ஆனால் வசுமித்ர நம்மை அழைத்து செல்வது அம்பேதகர் நேரடியாக சமூகத்திற்கு முன்வைத்த கொள்கைகளை/தத்துவங்களை பற்றிய விவாதத்திற்கு அதிலும் குறிப்பாக பௌத்தம் குறித்து.

நானுணர்ந்த நூலின் கருப்பொருளை பற்றிய பொதுசுருக்கம் இதுவே ..….

சாக்கியகுல இளவரசர் சித்தார்த்தன் தன்னை சுற்றி நடக்கும் மனித துயரங்களை துக்கங்களை கண்டு, இவை ஏன் மனிதமனதை பெரும் துக்கத்திற்கு ஆட்படுத்துகிறது என்ற கேள்விக்கு விடைதேடி ஒரு சிந்தனைப்பாதையை தேர்ந்தெடுக்கிறார். அந்த காலகட்டம் ஆரிய -பார்ப்பனர்களின் வர்ணக்கோட்பாடு சமூகத்திற்குள்ளும், அரச-அதிகார மட்டத்திற்குள்ளும் பல கதைகளைக்கொண்ட கடவுள்வழிபாடு / யாகசடங்குகளுடனும் தன் பலத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. ஆனால்  புத்தரின் தத்துவஅடிப்படையே பகுத்தறிவின்பாற்பட்ட  கடவுள்/சடங்கு மறுப்புதான். ஆகா வர்ணவேறுபாட்டிலிருந்து வெளியேற அக்காலத்திலேயே சங்கம் ஒரு வழியாக இருந்திருக்கிறது. ஆனாலும் உலகில் எந்த அமைப்பும், மதமும் கொள்கை/ தத்துவ விடையளித்தலில் 100% முழுமையடையாததுதானே. அதற்கு பௌத்தமும் விதிவிலக்கல்ல, பல சமரசங்கள் செய்யவேண்டியிருந்திருக்கும். அவருக்குபின் சங்கத்தில் சமரசம், மற்றும் கருத்துபுரிதலின் அடிப்படையில் பல பிரிவில் தோன்றின (ஹீனயானம், மகாயானம் & etc …) அதன்பின் ஆரிய-பார்ப்பன-இந்து மதம் இந்தியாவின் சிறு குறு தெய்வ வழிபாட்டு இனக்குழுக்களை தனது பெரு தெய்வவழிபாட்டுக்குள் உள்ளிழுத்து தத்துவதளத்திலும் பெருவிரிவடைகிறது. அத்தகைய பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய நிலப்பரப்பில் பௌத்தம் ஒடுங்குகிறது.  

இப்போது 19ம் நூற்றாண்டிற்கு வருவோம்  சாதி வர்ண பேதம் இந்தியாவெங்கும் காற்றைப்போல நீக்கமற நிறைந்த காலகட்டம்  ஒருபுறம் பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது, இன்னொருபுறம் அம்பேதகர் போன்ற தலைவர்களால் சாதிய கொடுமைக்கு எதிரான சமூக விடுதலை போராட்டமும் சேர்த்து முன்னெடுக்கப்படுகிறது, அந்நியரை வெளியேற்றினாலும் சாதி கட்டமைப்பை  உடைக்க முடியவில்லை என மனம் வெறுத்து " இந்துவாக பிறந்த நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்" என்கிறார். (இதே கருத்தின் அடித்தளத்தில்தான் பெரியார் மக்களுக்கு சமூக விடுதலை அளிக்காமல் அரசியல் விடுதையால் எந்த பலனுமில்லை என்று ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு தினம் என்கிறார்) 
அப்போது அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மார்க்கம் தேந்தெடுக்க தேவை வருகிறது. அவருக்கு முன்னாலிருப்பது இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம். இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை இஸ்லாம்/ கிறித்தவதிற்கு மதம் மாற்றுவதென்பது கலாச்சார பண்பாட்டில் அவர்களை அந்நியப்படுத்தி விடும் சீக்கியமும் பௌத்தமும் மட்டுமே இம்மண்ணின் கலாச்சார பின்புல மதமெனக்கொண்டு  பௌத்தத்தை தேர்வு செய்கிறார்.  அப்போது ஒரேதளத்தில் பயணித்தவரான பெரியார் அவரை சந்தித்து உங்கள் பௌத்ததேர்வு தவறானது சாதி இழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வாக இருக்குமென பகிரங்க அறிவுறுத்தலை முன்வைக்கிறார். காரணம் பௌத்தம் கடந்த 2000 ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டதையும் இனி வரும் காலத்திலும் பார்ப்பனிய வர்ணாசிர தருமம் அதனை எளிதில் உட்செரித்து முன்னகர்ந்துவிடுமென தீர்க்க தரிசனமுறைக்கிறார். அதனை  அம்பேத்கர் நிராகரிக்கிறார். இந்நூலின் கருப்பொருளை ஒட்டி இது ஒரு முக்கியமான விவாத பொருள் ஆனால் இந்நூலில் வசுமித்ர இத்தளத்தை பெரிதாக விவாதிக்கவில்லை.

ஆக இந்திய தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைத்ததும் புத்தரை புனிதப்படுத்தி தொழுஉருவாக மாற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்ட அம்பேத்கர் " புத்தமும் அவரது தம்மமும்" நூலை எழுதுகிறார். கடவுள்மறுத்தது பகுத்தறிவு பாதைக்காக தோன்றிய பௌத்தம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிற்சேர்க்கையாக பல கதைகள்/விளக்கங்கள் புகுத்தப்பட்டு இறுதியில் மீண்டும் ஒரு சராசரி தொழுஉரு  கடவுள்வழிபாடாக மாறி நிற்கிறது, ஏன் புத்தரின் மறுஜென்ம வினாவுக்கான "கர்மா - வினை" பதிலே பகுத்தறிவு விவாதத்தில் காலூன்றி நிற்க முடியாததுதானே?
அதனை அம்பேத்கரது  " புத்தமும் அவரது தம்மமும்" நவயானபௌத்தமாக வழிமொழிகிறதென்பதே வசுமித்ராவின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" நூலின் விவாதப்பொருள். புத்தமடைவதற்கான 32 அங்கலட்சணங்களை கொண்டவர் சித்தர்தனென பௌத்த வழித்தோன்றல்கள்சொல்வதை எந்த தர்க்கவிவாதமின்றி அம்பேதகர் ஏற்று புகழ்வது இந்நூலின் முக்கிய விவாதப்பகுதி. பல மார்க்சிய எழுத்தாளர்களின் பௌத்த/அம்பேத்கரிய மேற்கோள்களை எடுத்தாண்டிருப்பினும் எனக்கு அதிகப்படியான பக்கங்களும் கருத்தியல் அடர்த்தியும் சில இடங்களில் சோர்வு தந்தது, பக்கங்களை இன்னும் குறைத்திருக்கலாம், இது எனது பார்வை மட்டுமே, ஒருவேளை இந்த அரிதான விவாதத்திற்கு இந்த அளவு நியாயமாக இருக்கலாம்.  

அம்பேதகர் இன்று இருந்தால் நிச்சயம் இதனை ஒரு ஆரோக்கிய விவாதமாக எடுத்துக்கொள்வார், காரணம் நான் கேள்விப்பட்ட வரையில் இந்தியாவில் தனிநபர் நூலகமாக 64000 புத்தகங்ளுக்கும் மேல் சேகரித்து படித்தவர் அம்பேத்கர், சமூக/அரசியல் பற்றி 7000 பக்கங்களுக்கு மேல் எழுதியவர் நிச்சயம்  இத்தகைய கருத்தியல் விவாதத்தை ஆதரிப்பார். 

நூலை முழுவதும் முடித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகள் ….
இன்று அனைத்து தலித்திய அம்பேத்கரிய கட்சிகளும் இயக்கங்களும் சட்டப்புத்தகம் தாங்கிய நீல கோட் அணிந்த அம்பேத்கார்
உருவஅடையாளங்களை மட்டும் காட்சிப்படுத்துகின்றன, சாதி விடுதலையை முன்னிறுத்தி "துவராடை" அணிந்த பௌத்தஅம்பேத்கர் எங்கே?
அவர் வழிகாட்டி சென்றபடி இந்திய தலித்தியசமூகம் பௌத்ததை ஏன் பற்றி தொடரவில்லை?

எல்லாவற்றையும் விட இங்கு பௌத்தம் எங்கே ??

யா. பிலால் ராஜா 






Thursday, May 16, 2019

கன்னிமாரா - சென்னை அரசு அருங்காட்சியகம்

 
 
நன்றி சொல்வனம்.காம் (மே 2019 இதழ்)

சென்னையில் வாசிக்கத்தொடங்கி 10 ஆண்டுகளுக்குமேலாகியும் மாநகரின் முக்கிய அடையாளமான கன்னிமாரா நூலகத்தை இன்னும் பார்க்காதது ஒரு மனக்குறையாக இருந்தது. என்னை ஒரு வாசிப்பாளன் என சமீபமாக தற்பெருமை பேசத்துவங்கிவிட்டதால் நாட்டின் பழம்பெரும் நூலகத்தை பார்த்து வைப்பதென்பது கொஞ்சம் அவசியமாக்கப்பட்டது. ஒரு வார ஓய்வுநாளில் " அம்மா குடிநீர்" ஒரு பாட்டிலுடன் ஏழும்பூர் புறப்பட்டேன். ஒட்டுமொத்தமாக அந்த பகுதியிலுள்ள 6 வளாகங்களை சுற்றிப்பார்க்க 15 ரூபாய் என்றார்கள். கன்னிமாரா நூலகம் தவிர, தொல்லியல் அருங்காட்சியகம் , சிறுவர் அருங்காட்சியகம், உயிரியில் அருங்காட்சியகங்களின்  தொகுப்பு இவ்வளாகம்.  பத்தாண்டுகளுக்கு முன்புவரை தமிழக பள்ளி கல்லாரி மாணவர்களின் சென்னை கல்விசுற்றுலா பட்டியலில் கட்டாயம் இவ்வருங்காட்சியகத்திற்கு இடமுண்டு தற்போது எப்படியென்று தெரியவில்லை, அதனை தீம்பார்க்குகள் ஒருவேளை இடம்பெயர்த்திருக்கலாம்  90களின் மாணவர்கள் மெட்ராஸ் செத்தகாலேஜ் என்று சொல்வது  இவ்வளாகத்தைதான்.
 

 
முதலில் சென்றது நூலக அரங்கிற்குத்தான் 4 தளங்கள், ஒவ்வொரு புத்தக வகைப்பாட்டியலுக்கும் ஒவ்வொருபகுதி, ஆனால் இவை புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள்,  கன்னிமாரா நூலகம் சம்பந்தமாக பத்திரிக்கைபுகைப்படங்களின் முன்பு பார்த்த பழைமையான  கட்டிடஅமைப்பு  கண்ணில்படவில்லை. அங்குள்ள ஊழியரிடம் இதுபற்றிகேட்க ,  "முதல் தளத்தில் நாளிதழ் பிரிவு போய் அந்த அரங்கின் கடைசியில் கதவுஒன்னு சாத்திருக்கும் அதுவழி போங்க…" என்றார், அது திகிலான ஒரு சுரங்கப்பாதை போல் நீண்டு அந்த கட்டிடத்தின் பின்னாலுள்ள பழம்பெரும் 1896 ல் திறக்கப்பட்ட கன்னிமாரா நூலகத்தில் கொண்டு நிறுத்தியது, வாசலை அடைத்தாற்போல் மேசையிட்டு சில ஊழியர்கள் அமர்ந்திருந்தனர், " உள்ளே பார்க்கலாமா?" என்றதும் "இல்ல சார் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதியில்லை.." என்றார்கள். நான் ஒரு கணம் தயங்கி, எப்படியாவது சமாளித்து பேசி உள்ளேபோய் ஒருஎட்டு பார்த்துவிடவேண்டுமென மனம் கணக்கிடும்போதே என் கண்களில் ஆர்வத்தை கண்டுகொண்ட ஒரு ஊழியர், "இந்த ரெஜிஸ்ட்ல ஒரு கையெழுத்து போட்டுட்டு ஒரு 10 நிமிஷம் பாத்துட்டு வந்துருங்க…" என்றார்.
1890 இல் அப்போதைய பிரிட்டிஷ் அரசின்  சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்ட  இந்நூலகம் 130 ஆண்டு பழமை உள்ளேங்கும் பிரதிபலித்தது, ரசனையான நூலக வடிவமைப்பு, இரண்டு தளங்களில் புத்தக அலமாரிகள் அமைத்திருக்கிறார்கள், ஒவ்வொரு பகுதியிலிருந்து ஒரு சிறு மர படிகள்வழி மேலேறி நூல்கள் எடுக்கலாம் ஆனால் தற்போது கட்டிடமும் மர வெளிப்பாடுகளும் பலமிழந்து விட்டபடியால் உபயோகிக்க அனுமதியில்லை. சுவர்களில் பகலில் விளக்கு எதுவும் தேவையில்லாதபடிக்கு பெல்ஜியதிலிருந்து வரவழைக்கப்பட்ட  வேலைப்பாடு நிறைந்த கண்ணாடி ஜன்னல்கள் இக்கட்டிடத்தான் சிறப்பு.
 

 
பெரும்பாலான அலமாரிகளில் பழைய ஆங்கில நூலகளே பிரதான சேமிப்பாக இருக்கிறது. உள்பகுதியெங்கும் நூற்றாண்டுக்கான தூசியும் அமைதியும் புத்தகங்களின் மேல் உறைந்து கிடக்கிறது. வாயிர் கண்கணிப்பு ஊழியரின் கண்ணில் படாத ஒருஇடத்தில் நின்று ஒன்றிரண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், கேட்டால் அனுமதிக்க மாட்டார்கள் என் கணித்து, அதேபோல் வெளிஏறும்போது ஒரு பேச்சை போட்டு பார்த்தேன் அனுமதி இல்லை என்றார்கள். முன்னரே எடுத்தது நல்லதாக போய்விட்டது.
உள்ளே யாருமில்லை என நினைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு அலமாரி பகுதியில் மூவர் அமர்ந்து சில புத்தகங்களை தூசி பிரித்து தனியாக எடுத்துக்கொண்டிருந்தனர், என்னை கண்டதும் எந்த டிபார்ட்மென்ட் சார் ? என்றார் ஒருவர் " பப்ளிக் விசிட்டர் சார் .." என்றேன். அவர்கள் அண்ணா நூற்றாண்டுநூலக ஊழியர்கள் என்றும் பழைய புத்தகங்களை மின்னூலாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இங்கிருக்கும் புத்தங்களை தேர்வு செய்து எடுத்துப்போக வந்தவர்களென
சிறுஉரையாடலில் தெரிந்துதது.
 
இந்நூலகத்தில் 1553-ல் அச்சிடப்பட்ட  மிகப்பழமையான நூலொன்று  ஒருகண்ணாடி  பெட்டகத்தில் காட்சிக்காக பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது. 1781 -ல் தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம்  தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது அங்கு அச்சான "ஞான முறைமைகளின் விளக்கம்"  என்றநூலும் காட்டிச்சிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கிப்போயிருந்த அந்நூலின் பக்கங்களை காலம் கரைத்துக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் அரசின் சென்னை மாகாணத்தின் முக்கிய வரலாற்று சின்னமொன்று தூசுமிகுந்த தன் இறுதிமூச்சை நிதானமாக வெளியேற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
 


 
கன்னிமாராவிற்கு அடுத்த கட்டிடம் தொல்லியல், சிற்பங்கள், மற்றும் நாணயவியல் காட்சி அரங்கம். இந்த வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளவையனைத்தும் ஐம்பொன் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட 7 முதல் 15 நூற்றாண்டு வரை தமிழத்தில் பல பகுதியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படசிலைகள், கண்ணாடிப்பெட்டகங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தி வைத்துள்ளனர், பெரும்பாலும் சிவன், பெருமாளின் அவதாரங்களாகவும் அம்மனின் அவதாரங்களாகவும் பெயரிடப்பட்டுள்ளன, இறுதியாக ஒருஇடத்தில் திருஞானசம்பந்தர் என்று பெயரிடப்பட்டு சில ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன அதுவரை எனக்கிருந்த சந்தேகம் இங்கு வலுவானது 
திருஞானசம்பந்தர் மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பாலான சிலைகள் மெலிந்த தேகம் ஒற்றை உடை பிச்சை பாத்திரம் தலையில் சுருள் முடி வடிவம் கொண்டவையாக இருக்கிறது, இந்திய துணைக்கண்டண்டத்தின் இதுவரையிலான தொல்லியல் அகழ்வு முடிவுகளெல்லாம் நமக்கு ஒன்றை சொல்லியிருக்கின்றன சமணமும் பௌத்தமும் தான் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுக்கட்டிடம், உருவம் வரைதல், புடைப்பு சிற்பம், சிலை ஆக்குதலில் தற்போதைய இந்துமத உருவவழிபட்டு, சிலையாக்க  கலாச்சாரங்களுக்கு முன்னோடி. பௌத்தர் மற்றும் சமணர்  தலைகளில் முடிகள் சுருள் சுருளாக சித்தரிப்பது அவரகள் ஞானமடைந்த "உஷ்நிஸா" (விழிப்புற்ற நிலையின் உடலியல் வெளிப்பாடு) நிலையை குறிப்பதாக பௌத்தம் சொல்கிறது, அந்தவகையில் சிலபல சிலைகள் தவறான யூகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதா? வாளகம் முழுவதும் என் பின்னால் வந்துகொண்டிருந்த காவல்காரர் கண்களுக்குத்தப்பி நானெடுத்த சைவ,வைணவ அடையாளமற்ற திருஞானசம்பந்தர் கீழே.
இந்த வளாகத்திலுள்ள முக்கியப்பகுதி மையக்கட்டிடமான அரசு அருங்காட்சியகம்தான் கன்னிமாரா கட்டிடத்திற்க்கும் முந்தயது மற்றோரு அரங்கில் அகழ்வாரய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்கள் தொகுப்பு, முக்கியமாக நடுகற்கள் அவற்றின் செய்தி மற்றும் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் குறிப்போடு வைக்கப்பட்டுள்ளது, இவ்வரங்கில் கற்சிற்பங்கள் பெரும்பாலும் பௌத்த சமண சமயத்தை சார்ந்தவை, இங்குள்ள சோழ பாண்டிய பேரரசுகளின் சில இஞ்ச் முதல் சிலஅடிவரையிலான செப்பு பட்டயங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவைகள் இவைகள் எளிதில் வேறெங்கும் காண முடியாதது.   இந்த கட்டிடத்தின் பின் பகுதியில்தான் படிம உயிரியல் காட்சியகம் இருக்கிறது, சின்னஞ்சிறு உயிரின்  பதப்படுத்தப்பட்ட படிமத்திலிருந்து யானை மற்றும் திமிங்கலத்தின் எலும்புக்கூடு வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மாணவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய அரங்கு இது.


 
மானுடவியல்காட்சியகம் தனியான ஒரு கட்டிடத்தில் இருக்கிறது, சற்றே இருளடைந்த இந்த காட்சியகத்தில் நான் ஒருவன்மட்டும் நுழைந்திருந்தேன் அதன் வாசலில் 60 வயதை நெருங்கும் ஒரு காவலாளி தனது சிறிய போனில் " தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ..." பாடல் மெலிதாக ஒலிக்கவிட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்து கண்மூடிப்படுத்திருந்தார், என் காலடி ஓசை கேட்டு கண்திறந்து பார்த்துவிட்டு மீண்டும் மூடிக்கொண்டார். அந்த அரங்கை நான் சுற்றி பார்த்து திரும்பி வாசல் வரும்வரை இன்னொரு பார்வையாளர் அங்கு வரவேயில்லை, ஒருவேளை அன்றைக்கு நான் ஒருவன்மட்டுமே பார்வையாளனாக இருந்திருக்கலாம். " தாயின் மடியில் தலை.." பாடல் மட்டும் மீண்டும் மீண்டும் அவர் போனில் ஒலித்துக்கொண்டிருந்தது. உலகில் பெரும் சலிப்பும், சோர்வும் தரக்கூடிய வேலை இந்த அருங்காட்சியக காவலாளி பணியாகத்தான் இருக்கும்போல. பண்டைய அரசுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இந்திய தொல்குடி சமூகத்தைப்பற்றிய முக்கியமான ஆவணங்களும் கருவிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, திப்புசுல்தான் பயன்படுத்திய கையடக்க பீரங்கி உட்பட.. ( வாசலில் திப்பு பயன்படுத்திய பெரிய பீரங்கி ஒன்று புதர்களுக்கு மத்தியில் இருந்தது) ஆயுதங்கள் பிரிவில் தென்னிந்தியபேரரசு ஆயுதங்கள் தவிர பிரிட்டிஷ்/மேற்கத்திய போர்ப்பயன்பாட்டு  ஆயுதங்களும் பார்க்ககிடைத்தன, 18ம் நூற்றாண்டில் பிரிட்டிசாருக்கு தென்னகத்தில் பெரும் சவாலாக இருந்தது காவல் மற்றும் களவுகுடிகள் பயன்படுத்திய வளரி (வளைதடி) என்ற ஆயுதம், (மதயானைக்கூட்டம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் நாயகனை வீழ்த்த வேல.ராமமூர்த்தி பயன்படுத்திடுவது இவ்வளரியைதான் ) ஆயுதபரவல் தடைச்சட்டத்தை தெற்க்கில் கடுமையாக பிரிட்டிஷ் அரசு அமல்படுத்த காரணமான வளரியை ஒருமுறை நேரில்காண ஆசைப்பட்டு தேடினேன்  அதற்க்கான எந்த தடயமும் அங்கில்லை.
   
அந்த அரங்கிலிருந்த்து வெளியேறுமிடத்தில் 15 அடி உயரத்தில் மரத்திலான வினோதமான "  மெரியாப் பலித்தூண் "  எனப்பெயரிட்ட ஒன்றை வைத்திருந்தார்கள் அதனருகில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இப்படத்தின் கீழே.
 
  • தாம் மேற்கொண்ட மஞ்சள் வேளாண்மையில் கூடுதலான மகசூலைப்பெற ஒரிசாக் கொந்தர் பழங்குடியினர் தம்புனித தெய்வத்திற்கு மனித உயிர்ப்பலியினை மேற்கொண்டனர்.
  • இரத்தம் சொரியும் படையலை அளிக்காமல் மஞ்சள் அடர்சிவப்புநிறம் அடையாது என இப்பழங்குடியினர் நம்பினர். 
  • யானை தும்பிக்கை போன்ற பலித்தூணின் கிடைமட்ட பகுதியில் பலியிடப்படுவோர் இறுகக் கட்டப்பட்டனர்.
  • இப்பலித்தூணின் செங்குத்துப் பகுதியின் மீது கிடைமட்ட பகுதி வேகமாக சுற்றப்படும், ஏற்கனவே இலுப்பைப்பூ சாராயத்தால் போதை ஏற்றப்பட்ட பலியிடப்படுவோர் இச்சுழலியக்கத்தால்  மயக்கமடைந்து கத்தவியலாமல் செயலிழந்து கிடப்பார்கள்.
  • பலியிடப்படுவோர் கத்தினால் ( வலி தாங்காமல்)  அப்பலியை புவி தெய்வம் ஏற்காது என நம்பப்பட்டது.
  • கொந்தர் பழங்குடியினரிடம் மனிதப்பலி தடைசெய்யப்பட்ட(1852) பின் காணக்கிடைக்கும் ஓரே பலிதூண் இங்கிருப்பதுதான்.
யா. பிலால் ராஜா
          
 

Saturday, March 23, 2019

ஓநாய் குலச்சின்னம்

ஓநாய் குலச்சின்னம் ( வாசிப்பு )
 
 
நவீன தமிழ் சினிமா படைப்பாளிகள் தீவிர இலக்கியத்தை பற்றி பொதுவெளியில் பேசக்கேட்பது அபூர்வம் , 2012-ல் இயக்குனர் வெற்றிமாறன்  "ஓநாய் குலச்சின்னம்" என்ற மொழிபெயர்ப்பு நூலை சுயமாக பதிப்பித்து வெளியிடும் செய்தி படித்ததும் ஓரளவு அவதானித்துவிட்டேன் இது நிச்சயம் ஓர் அரியபடைப்பாக .இருக்குமென்று, புலம் பதிப்பகத்தின் மீள்வெளியீடான  இந்நூலை தற்போதுதான் வாசிக்க வாய்த்தது. கட்டாயம் வாசிக்க வேண்டிய தமிழ் மொழிபெயர்ப்பு வரிசையில் இந்நூல் முக்கியமானது. ஜியாங்  ரோங் தொழில்முறை இலக்கியவாதியோ படைப்பாளியோ இல்லை. 50 ஆண்டுகளுக்கு (1967) முன் சீனாவின் வடப்புற பெருநிலமான மங்கோலியாவிற்கு சீன அதிகார/கலாச்சார மாற்றத்தின் காரணமாக அப்பிராந்தியத்தின் மங்கோலிய நாடோடி மேய்ச்சல்  இனக்குழுவுடன் பணியாற்ற அனுப்பப்படுகிறார் அந்த வாழ்வை ஒரு புனைவாக படைத்து 2003 வெளியிடுகிறார், பின் அது இதுவரை சீனாவின் அதிகம் விற்பனையான மாவோவின் " சிவப்பு புத்தகம் " திற்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.  பரந்துபட்ட மங்கோலியாவின் மேய்ச்சல் நிலதொன்மம், உயிர்ச்சங்கிலி  அம்மண்ணின் பூர்வீக இனக்குழுக்களால் எவ்வாறு புரிந்துணர்ந்து பாதுகாக்கப்பட்டது, பின் பேராதிக்கஅரசால் நிறுவப்படும்  பொறுப்பற்ற அதிகாரவர்க்கமனிதர்களால்  அந்நிலத்தின்  உயிர்சங்கிலி எவ்வாறு அறுத்தெறியப்பட்டு பாழ்நிலமாக மாற்றப்படுகிறது என்பதை "ஓநாய்கள் அழித்தொழிப்பு" சம்பவங்கள் வழியாக எழுதிச்செல்கிறார்.  மங்கோலியாவில் ஓநாய் அழிப்பு போல் உலகெங்கும் ஒவ்வொரு திணையிலும் ஒவ்வொரு வகையில் மனிதனின் வரைமுறையற்ற நுகர்விற்காக உயிர்சங்கிலி சிதைக்கப்பட்டு வருகிறது, அதற்கான உலகத்தர இலக்கிய ஆவணம் இந்த "ஓநாய் குலச்சின்னம்"

ஓநாய்களின் வாழ்வை காணொளியா இன்று பார்த்துவிடலாம் அல்லது அறிவியல் தகவலாக எதிலும் படித்து விடலாம் ஆனால் அவ்வினத்தின் ஆன்மாவோடு உறவாடி உணர்ந்து எழுதப்பட்டது ஜியாங்-கின் எழுத்துக்கள். இதுபோல் மனிதனுக்கும் நண்பனாகவும், விரோதியாகவும் உயிர் சங்கிலியில் தொடர்ந்து ஓடிவரும் ஓர்விலங்கினத்தை பற்றி  படைக்கப்படும் ஒன்று வாசிக்க வாய்ப்பது அரிது. தமிழில் வாசிக்கும்போதே  தெரிகிறதுவிடுகிறது மூலஎழுத்தின் ஆன்மா ஒரு பக்கத்தில்கூட பிறழ்ந்திருக்க வாய்ப்பில்லை, சி,மோகனின் இம்மொழிபெயர்ப்பு பணி தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வரிசைக்கு ஆகச்சிறந்தகொடை.

உலகின் ஏனைய பெரும் மிருகங்களை பழக்கப்படுத்திய மனிதனால் ஓநாய் இனத்தை ஏன் அடிமைப்படுத்த  முடியவில்லை ?
மங்கோலியாவிலிருந்து புறப்பட சிறு நாடோடி முரட்டு கூட்டங்கள் ஆசிய ஐரோப்பிய கண்டங்களை வென்று ஜெயித்ததற்கு காரணம்  ஓநாய்களிடமிருந்து கற்ற தாக்குதல் உத்தியா? "விடுதலை அல்லது மரணம்", "சரணடைதலுக்கு முன் சாவு "  சித்தாந்தங்களை மனிதனுக்கு கற்றுக்கொடுத்தது ஓநாய் இனங்களா? வேட்டை விலங்குகளில் ஓநாய்களின் ஊளை ஒலி மட்டும் எவ்வாறு தனித்துவம் மிக்கது? மேய்ச்சல் விலங்குகளை வேட்டையாடி, தசைகிழித்து அதனுயிர் அவ்வுடல் நீங்கவதற்குள் தின்றுவிழுங்கும் ஓநாய்களுக்கு சுவையரும்புகள் இருப்பது நாவிலா? வயிற்றிலா? இப்படி எண்ணற்ற வினாக்களில் மட்டுமல்ல விடைகளின் வழியாகவும் சிந்திக்க கற்றுக்கொடுக்கிறது "ஓநாய் குலச்சின்னம்"
2015-ல் இந்நாவலை தழுவி " Wolf Totem" என்ற சீனமொழிப்படம் வெளியானது .
 
நாவலிலிருந்து …..
இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர்வாழ்வதற்கு பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன. ஓநாய்களும், மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சியுண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை. உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை அப்படித்தானே? மான்களுக்கு தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக்குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய பரிதாபமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓடமுடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ,பாறைப் பிளவுகளிலோ முளைத்தால் இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல….. 
 
யா. பிலால் ராஜா