Tuesday, January 19, 2016

கைதட்டல்

   
முடிவு செய்திருப்பினும்  சற்று திகைப்பாய் இருந்தது
கைதட்டலை எப்படி கவிதையாய் எழுதுவதென்று....
கைதட்டலை பற்றி கவி எழுத குறைந்தபட்சம் 
ஒரேயொரு  கைதட்டலாவது என்னுடனிருக்கவேண்டும்
அதன் இருப்பிடம்  யாருக்குத்தெரியுமென்று தெரியவில்லை
இப்பெருநகரத்தில் அதன் முகவரி உங்களுக்குத் தெரியுமா?
கைதட்டல் கணங்களை எப்படி சேமிப்பது?
கைதட்டலை புரிந்துகொள்வது புதிராயிருந்தது
ஒருவேளை.....
நம்  கைகளில் மாயவிரலைப்போல முளைத்திருக்கலாம்
காணமுடியாத கைரேகைகளிலொன்றாக மாறியிருக்கலாம் 
வரவேற்ப்பறை சுவர்களில் சட்டமிட்டு மாட்டப்படிருக்கலாம் 
சபைகளில்  இருக்கையினடியிலும் ஒளிந்துகொண்டிருக்கலாம் 
மீள்நினைவுக்கு வராத ஒரு கனவாக கலைந்திருக்கலாம்
மேகம்போல் விண்ணில் எங்கோ சேகாரமாகிக்கொண்டிருக்கலாம்
 
எதிர்வரும்  விடுமுறை  நாள் ஒன்றில்
இந்த கவிதைக்கான கைதட்டலை
நகருக்குள் தேடிக்கண்டடைய திட்டமிட்டுக்கொண்டே
கண்ணயர்கையில்  
 
தட்..தட்...
தட்..தட்...
 
கதவு தட்டப்படும் ஓசை
திறந்து பார்த்தேன்
இருளைத்தவிர யாருமில்லை
 
தட்..தட்...
தட்..தட்... 
 
மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை
மீண்டும் திறந்து பார்த்தேன்
மீண்டும் இருளைத்தவிர யாருமில்லை
 
ஒருவேளை
கதவைத்தட்டியது   இந்த கவிதைக்காக
நான்  தேடுமொரு கைதட்டலாக இருக்குமோ?


யா. பிலால் ராஜா