Thursday, September 24, 2020

பிறன்மனை விழைந்தோன்


 (ராவணன் திரைப்பாடல்வழி ரகசியகாதலின் ரசனைக்குறிப்புகள்)


மனிதஇனம் காடோடித்தனமான மந்தை வாழ்வை விட்டு குடும்ப/குல  வாழ்க்கைக்கு நிலைக்கும்போது தனியுடைமையின் அடிப்படை அலகுகளில் ஒன்றான ஒருஆணுக்கு ஒரு பெண் என்ற குடும்ப அமைப்பு உருவாகிறது,  அந்த இணைஒப்பந்தத்திற்கு பிறழ்ந்த ஆணுக்கோ  பெண்ணுக்கோ பிறத்தியாரோடு உண்டாகும் காதல்- காமம் சார்ந்த உறவென்பது குற்றவுணர்வும் துரோகப்பண்பும் கொண்டதாகிவிடுகிறது. மனிதஇனத்தில் இதற்கென நடந்த பலிகள், போர்கள், குழுச்சண்டைகளால் நிலஎல்லைகளும்,  உலகவரைபடமும்கூட பலமுறைமாறியிருக்கிறது.

"பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே" 

 பாம்பா? வாழ்வை பற்றியேறக்கிடைத்த விழுதா? என பாகுபாடுதெரியாபிறன்மனை விழைதலைப்பற்றி எழுதுவதென்பது கத்தியினை கொண்டு எழுதுவது போல, எழுதும்போதே ஏட்டை கிழித்துவிடுமளவுக்கு அபாயமுள்ளது. ஒழுக்கம்/கற்பு/ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்துவாதத்தின் எதிர்பண்பான  கூடாக்காதல்கள் எந்த கோட்பாட்டையும்தாண்டி, பெருந்தேக்குவனத்தையும் பொசுக்கி தீர்க்கும் தீக்குச்சி . படமெடுத்தாடும் நாகத்தை முத்தமிடுவதற்கு ஒப்பென உணர்த்தப்படும் இக்காதலின் வகையினை காவியத்தன்மையுடனும் உண்மையுணர்வுடனும் அணுகப்பட்ட படைப்பு தமிழ் சினிமாதிரையில்  கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை. ஆனால் இப்பேராண்மைக்கு எதிர்பண்பாக உடலையும் மனதையும் எதிரெதிரே நிறுத்திவைக்கும் கூடாக்காதலைபற்றி தமிழ்சினிமாவில் எழுதப்பட்ட அனைத்து படைப்புகளையும் துலாபாரத்தின் இடதில வைத்தால் வலம் இழுத்திறக்கும் கனம்கொண்டது "ராவணன்" படத்திற்க்காக எழுதப்பட்ட  4 தாள்களில் அடங்கிவிடும் காட்டுச்சிறுக்கி , உசுரோபோகுதே பாடல்கள்.

"ஊரான் காட்டு கனியே
ஒன்ன நெனச்சு -
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி!
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி!
ஒன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி"

அக்கினி பழமென்று தெரிந்தும் சுவைக்க துணிவிக்கும் தூண்டல் எது? இருள்பாதையின் முடிவை அடையப்போவதில்லை எனத்தெரிந்தும் இருவரையும் கள்ளமாக கைகோர்த்து இறங்கிநடக்கத் துரத்தும் கெட்டவிதி அதுவா?  ஆதம்-ஏவா சுவைத்தெறிந்த கனியின் மிச்சத்தை பெரும்பசியின்பால்தின்ற மூன்றாவது ஒருவன் வழிவந்த அதிரகசிய காதல்பசியா? வெடித்துளையற்ற எரிமலையை மனதில் சுமந்திருக்கும் ஒருவன் காலம் துளைத்த ஊற்றுக்கண் வழி நிகழ்த்தும் பேரன்பின் வெடிப்பு அது. மன இருட்குகையிலிருந்து மாறன் எய்தும் அவ்விஷஅன்(ம்)புக்கு காலமே முறிமருந்து  

"தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு!
வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு! "

"ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு "

மன பாசாங்கை கழற்றியெறிந்து பார்த்தால் யாரோ ஒருவளின் ஏர் கிழிச்ச தடத்துவழி நீர்கிழிச்சு போவது போல் நம்மனமும் போயிருக்கும். பாறாங்கல்லை சுமந்து வழிமறந்து ஒரு நத்தைக்குட்டியாக நகர்ந்திருக்கும். எங்கோ ஓரிடத்திலாவது வண்டு தொடாமுகம் ஒன்றை கண்டு ஒரு வானதாரத்தின் பெருமூச்சை நாம் வாங்கியிருப்போம் இல்லையா?அவளை முன்னிறுத்தி நம்மை பின்நடத்தும் கெட்டவிதிஅது, உயிர் நட்பிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத உறவிது. 

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல"

சாராயம் செய்யும் நேர்த்தியுடன் மனஇடுக்கின் ரகசியக்கசிவுகளை வடித்தெடுத்து உணர்வெழுத்தாக  சில பல்லவி சரணங்களில் வார்க்கப்பட்டிருக்கிறது இப்போதைக்காதல். பிறன்மனை விழைதலென்ற  விஷபோதையை வார்த்தை சிக்கன வடிவில் எழுதித்தாண்டுவதென்பது இனிவரும் கவிஞர்களுக்கு பெரும் சவால். இனி எழுதப்படப்போகும் மறையுணர்வு பாடல்களுக்கான "உறை" பொருள். ஆதியிலிருந்து மனித இனத்தை பீடித்த பெரும்போதை  கடவுள்  நம்பிக்கையெனில் சந்தேகமேயில்லாமல் அதனை இடதுகாலால் இடறித்தள்ளி முன்னகர்ந்து வரும் மூத்த அதிபெரும்போதை "பிறன்மனை காதல்".  கவனம் (கள்ள)காதலர்களே இந்த பிறழ்வகை காதலிலிருந்துகூட மீண்டுவிடலாம் ஆனால் இவ்விரு இசைபுதைகுழிக்கு காதுகளை சிக்கக்கொடுத்து வெளிவருதல் சுலபமல்ல. ஈக்கிமின்னலடிக்க, ஈரக்குலைதுடிக்க,இடிஇறக்கி, மழைகொடுத்து  பின்மாயமாகிவிடும்  இசைவனத்திற்கு வழிகாட்டி இழுத்துவந்த ரஹ்மான்-மணிரத்னத்திற்கு நன்றிக்கும் மேலான வார்த்தையொன்றை வைரமுத்துதான் கண்டறிந்து தரமுடியும். .ஒளி விழும் காதலின் எத்தனையோ அடுக்குகளை அரைநூற்றாண்டாக கொண்டாடிவிட்டு, இருளார்ந்த காதலையும்  சொற்களில்  வேல்செய்து வேட்டையாடித்தீர்த்த  "பிறமனைகாதல் கள்ளர்" கவிப்பேரரசு வைரமுத்து

துணைக்குறிப்பு:-
செவிவழி மனசுக்குள் "காட்டுச்சிறுக்கி"யை அழைத்துவந்த சங்கர்மகாதேவன் -அனுராதா ஸ்ரீராமுக்கு என் காதுகேட்கும் கடைசி நாள்வரை நன்றிகள்.

காட்டுச்சிறுக்கி  ( ஒப்பாரி வடிவம் )

பிலால் ராஜா 

Sunday, August 23, 2020

"கழுதைப்பாதை" - நூல் அறிமுகம்




80களின் கடைசி, எங்கள் குடும்பம் புதுவீடுகட்டி போடிநாயக்கனூர் நந்தவனம் தெருவில் குடியேறும்போது பார்த்திருக்கிறேன், "தனம்" தியேட்டரை ஒட்டி, மாதத்தில் பெரும்பாலான நாட்கள் காலியான ஒரு மைதானம் சிலநாட்கள் மட்டும் கழுதைமந்தையாக நிறைந்திருக்கும். பள்ளி முடிந்துவரும்போது அங்கிருக்கும் சிறுவர்களோடு நானும் அந்த கழுதை கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். பெரிய வட்டகைகளில் கரைத்து வைத்த எதையோ குடித்துவிட்டு, எங்கும் ஓடிவிடாமல் கயிறு கட்டிவிடப்பட்ட கால்களில் அங்குமிங்கும் நொடியபடி உலவிக்கொண்டிருக்கும், அடையாளமாக காது அறுக்கப்பட்டும், சூட்டுக்கோல் இழுவைகளால் ரணபுண்ணாகிப்போன நீர் வடியும் உடம்புடனும், ஐந்தாவது கால் முளைத்து விட்டதா? என ஐயம் கொள்ளுமளவுக்கு விரைத்து நீளும் ஆண்குறியும் தினசரி வேடிக்கை காட்சிகள் எங்களுக்கு. பொறுமையா? சோம்பலா? மனிதன் அறிந்துகொள்ள முடியாத பேரமைதி கொண்டவை கழுதைகள். அவைகளை பார்க்கப்பார்க்க, எங்கே அந்த நிறைந்தசோம்பல் என்னையும் பீடித்துக்கொள்ளுமே? என்று சற்று பயந்திருக்கிறேன். பின்னாளில் அவைகள் மேற்குத்தொடர்ச்சி மலை தோட்டங்களில் விளையும் காபி, ஏலம், மிளகு போன்ற மலை விளைபொருட்களை எந்த வாகனபாதையும் உருவாகாத இடத்திலிருந்து ஊருக்குள் இறக்குவதற்கு வைத்திருந்திருக்கிறார்கள் என தெரிந்துகொண்டேன், 90' களின் துவக்கத்தில் அந்த கழுத்தைமந்தைகளும் காணாமல் போனது. 

 தற்போதைய போடிநாயக்கனூர் சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் "போடிபட்டி" யாக இருந்தபோது இதுபோல் கழுதைமந்தைகளை உருவாக்கி பராமரித்து மலைக்காட்டிற்கும் தரைக்காட்டிற்குமிடையே (போடி -குரங்கணி -போடிமெட்டு- டாப் ஸ்டேஷன்(மூணாறு)) அலைந்து வாழ்ந்த குடும்பங்கள்,கூலிகள், முதலாளிகள், இவர்களுக்கிடையே வணிகவாடையற்று காட்டையே கடவுளாகவும் வாழ்வாகவும் கொண்டுவாழ்ந்த முதுவா பழங்குடிகளின் சடங்குகள், குலதெய்வதொல்கதைகளைத்தான் எஸ். செந்தில்குமாரின் தன் "கழுதைப்பாதை" படைப்பின்வழி தரையிறக்கியிருக்கிறார். ஆதியில் உருவான தலைச்சுமைகூலிகளின் ஒராள்(ஒற்றையடி) மலைப்பாதையையும், வாழ்வாதாரத்தையும் தூர்த்து உருவானவை கழுதைப்பதைகள், இதற்க்கென உருவான பலசமுக குடியேற்றங்கள் அதன் பின்னணியிலான வன்மங்கள், தூரோகங்கள் என மொத்தத்தில் அந்த மேற்குத்தொடர்ச்சிமலை வழியே மனிதன் எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும் ஒரு கதையுண்டு என்பதை மூவண்ணா,சுப்பண்ணா , ராக்கப்பன், கங்கம்மா, முத்துச்சாமி நாயக்கர், நாகவள்ளி, வெள்ளையம்மா, செளடையன்/ராசப்பன் /ராமசாமி செட்டியார் பாத்திரங்கள் வழி தனித்த எழுத்து நடையுடன் இந்நாவலில் பதிந்திருக்கிறார். இக்கதைக்காக நிறைய விவசாய/ சுமை கூலிகள், மலைவாழ் பழங்குடிகளுடன் பலகாலம் சுற்றியலைந்து கதைகளை சேகரித்து சுமந்துவந்திருக்கும் செந்தில் குமாரின் களப்பணி அபாரமானது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் ராஜ்முகமது ராவுத்தர் 100 மாடுகளில் உப்பு வணிகத்தை தமிழ்நாட்டிலிருந்து சாகச வணிகப்பயணமாக இம்மலைவழியாக கேரளாவிற்கு நிகழ்த்தி காட்டிய அத்தியாயங்களை படிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் குரங்கணியிலிருந்து இக்கதைக்களத்தின் பாதையையொட்டி ட்ரெக்கிங் சென்றபோது மலைவனத்தில் பார்த்த நூற்றாண்டை தொடும் வயதில் இஸ்லாமிய அடையாளங்களுடன் பாழடைந்த 10 பேர் அமரக்கூடிய கட்டடம் ஒன்றை பார்த்தது நினைவுக்கு வந்தது. நாவலின் துவக்க அத்தியாயங்கள் கதை நிலவியலையும் காலத்தையும் வாசகருக்கு கடத்த சற்று தாமதித்தாலும் அதன்பின் அக்குறை அகன்று கதை குதிரைப்பாய்ச்சலாக படிப்பவர்களை மலையேற்றிவிடும். இந்த நிலவியலை நேரடியாக அறியாத நகர்ப்புற வாசகர்களும் "மேற்குத்தொடர்ச்சி மலை" "பிதாமகன்" மலைக்காட்டு காட்சிகள் நினைவிருப்பின் இக்"கழுதைப்பாதை"யில் இணைவது எளிது.

 கடந்த அரை நூற்றாண்டுகளில் வாகனமும் மலையின் சாலைகளும் கழுதை/குதிரை/மாடு போன்ற ஜீவாதிகளின் சுமைதூக்கும் வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்து விட்டது, இருப்பினும் அது ஒரு மனிதனோடு பேசாத ஆனால் ஒன்றையொன்று சார்ந்த இரு இனங்களுக்குக்கிடையேயான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எந்திரங்களோடு பணிபுரிந்து எந்திரமாகவே வாழத்துவங்கிவிட்ட நமக்கு இதுபோல இன்னும் நிறைய "கழுதைப்பாதை" பயணங்களை திரும்பி பார்க்க தேவை இருக்கிறது.

 -பிலால் ராஜா

Saturday, June 20, 2020

AGAM (Rock Band)


AGAM (Rock Band)

 

( நன்றி - திரைக்களம் )
 
முன்னொருமுறை  VTV - "ஆரோமலே" பாடலின் Cover version-ஐ இணையத்தில் கேட்டுக்கொண்டிருந்தேன், மூலப்பாடலை எட்டிப்பிடிக்கும்தரமுடைய  மறுஆக்கபாடல்கள் (Remake/Cover) வெகுசிலவைகள்தான். அந்த காணொளியில் நான்கேட்ட "அரோமலே" அப்படியான ஒன்று, அதில்தான்  "AGAM" Rock Band குழுவும் அதன் பிரதான பாடகர் ஹரீஷ் சிவராம கிருஷ்ணனும் அறிமுகமானார்கள்.

2010-க்கு பின் கேரளா பின்னணியில்  கோவிந்வசந்தாவின் (96 புகழ்) "Thaikkudam Bridge"  Rock Band இசைக்குழு புறப்பட்டு இசையோடு  சுற்றிவந்தபோது அவர்களுக்கு இணையாக  பெங்களூரிலிருந்து "AGAM " Rock Band குழுவும் தென்னிந்தியா பெருநகர  மேடைநிகழ்ச்சிகளின்  பாட்டு பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தனர்.
ஒற்றைத்தந்தி கட்டப்பட்ட அபூர்வ கிட்டாரைப்போல்,  "அகம்" குழுவின் அற்புதமும் பெரும்பலமும் அதன் பிரதானபாடகர் ஹரீஷ்தான். 
கர்னாடக  இசையின் பின்புலத்தில் பிரபலமான திரைப்பாடல்களையும், சுயஉருவாக்க பாடல்களையும் அதன் மூலஅளவீட்டிலிருந்து சந்தங்கள் மீறி விடாதபடி அற்புதமாக படும்முறை ஹரீஷ்னுடையது. ஒவ்வொரு பாடலின் முன்னும், இடையிலும் ஹரீஷ் எடுத்துவரும் ஆலாபனைகள் ஆற்றுநீரோட்டத்தில் எழும் அலைகளைப்போல அழகானவை  ஒருபோதும்  கரைமீறி கேட்ப்பு எல்லைக்கு வெளிச்செல்லாதவை. அதேபோல்  பெரும்பாலான பாடல்கள்  மூலத்திலிருந்து மெட்டவிழ்ப்பு (unplugged singing)  முறையில் பாடப்படுபவை எனினும் அந்த பாடலின் உணர்வை பலபடி மேலெடுத்து சென்றுவிடுவதே ஹாரிஸ் பாடும்முறையின் பலம்.  "Kappa TV" யின் இசைநிகழ்ச்சி மற்றும் youtube வழி அதிகம் கேட்கப்பட்ட/கேட்கப்படும் இசைகாணொளி அகம் குழுவினருடையது. இந்த பத்தியை படித்தவுடன் கேட்டேஆகவேண்டிய அக(ம்)த்தின் அழகு இந்த "மலர்களே..." பாடல்.
 
மேலும் சில ....
பச்சைமாமலை 

பிலால் ராஜா







Saturday, April 11, 2020

Perfume - Movie View

Perfume (The Story of a Murderer)
 
நன்றி வாசகசாலை இணையஇதழ் (7th April 2020)


ஹோமோசேபியன்ஸ்க்கும்  பரிணாம வளர்ச்சியடைந்த இன்றைய நவீனமனிதனுக்கும் இடைப்பட்ட  ஆதிகுகைமனிதனுக்கு   ஐம்பொறிகளின் ஒன்றான மூக்கின்வழி மோப்பசக்திதான் முக்கிய உணர்வுஉறுப்பாக இருந்தது. குகை/ மரம்/ வனப்புதர்களை அண்டி வாழ்ந்துவந்த மனிதக்கூட்டம் விலங்கு /தீ / பிறமனித கூடங்களின் அருகாமையை மோப்பத்தால் உணர்ந்து எச்சரிக்கை கொண்டது. பின் உணர்வுறுப்புகளின் தலையாயதும் உயிரியல் ஆச்சரியங்கள் ஒன்றான கண்ணின் காட்சியுணர்வு மேம்பட,  அதிசிறந்த மோப்பத்திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து  இன்று நாம் வாழும் அறையின் நறுமண/நாற்ற/சமையல் மணம் அறிவதைதவிர வேறெதற்கும் நீட்சியுறாத ஒன்றாக  ஒரு அறையளவுக்கு சுருங்கிவிட்டது மனித மோப்பத்திறன்.

Perfume (The Story of a Murderer) திரைப்படத்தின் நாயகன் ஜீன்-பாப்டிஸ்ட் (Ben Whishaw) அப்படியொரு அதிவிசேஷ மோப்ப உணர்வு கொண்ட சிசுவாக 18ம் நூற்றாண்டின் பிரான்ஸ்ன் சேரி ஒன்றின் மீன்/மாமிச சந்தையில் கொடூர நாற்றங்கொண்ட கழிவுகளுக்கிடையில் பிறக்கிறான், பிறந்த சிசுவை மீன் கழிவுகளுக்கிடையில் தள்ளி கொல்ல முயன்றதாக தாய் தூக்கிலிடப்பட, ஜீன் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்து பின் தோல் பதனிடும் ஒரு இடத்தில் கொத்தடிமையாக்கப்படுகிறான், பிறந்தது முதல் பதின்பருவம் வரை அவன் உணர்ந்தது எல்லாமே மோசமான கொடூரமான நாற்றங்கள்தான், ஆனால் அவனுக்கிருக்கும் அதிநுட்ப வாசனை உணர்வினால் அவற்றை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் திறன் நாளுக்குநாள் அதிகரிக்கிறது, சிலகாலம் கழித்து அவன் எஜமானனால்  பாரிஸுக்கு வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறான், அந்நகரத்தில் நல்ல பல வாசனைகளை உணர அவன் மோப்பஉணர்வு உக்கிரம் கொள்கிறது. அங்கு ஒரு வாசனை திரவிய (perfume) கடையினை வழியாக நறுமணங்களின் மீது மனிதருக்கிருக்கும் காதலை உணர்கிறான். அக்கடையின்  ஒவ்வொரு சீசாவிலிருக்கும வாசனை மூலங்களை  தூரத்திலிருந்தே   பிரித்துணரமுடிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவனை ஒரு அற்புத வாசனை கடக்கிறது, மோப்பஉணர்வால் அதனை துரத்தி செல்ல  அது ஒரு பெண் உடலின் வாடையென அறிகிறான், ஒரு இருள்போல அவளை அணுகி அவ்வாடையை கிரகிக்கும்போது அவள் திடுக்கிட்டு அலறஅவளை அமைதியாகும் போராட்டத்தில் உயிரிழக்கிறாள், ஆனால் அந்த அசம்பாவிதம் அவனை பாதிக்கவில்லை அவள் ஆடைகளைந்து அவ்வுடல் வாசனையை முழுவதும் துய்க்கிறான். பெண்ணுடல் நறுமணம் அவனை உன்மத்தம் கொள்ளச்செய்கிறது.ஆனால் அவ்வாடையை எப்படி கைகொள்வது தெரியால் அங்கிருந்து செல்கிறான்.
 

பின் அந்நகரின் மிகச்சிறந்த இத்தாலிய வாசனை திரவிய  வல்லுனரும்  வியாபாரியுமான கியூசெப் பால்டினியை தனது நறுமண உருவாக்க திறமையால் கவர்ந்து மலர்களிடமிருந்து நறுமணத்தை பிரித்தெடுக்கும் நுட்பம் கற்கிறான். அத்துடன் கியூசெப் இதுவரை மனிதன் கண்டுபிடித்த 12 வகையான வாசனைகளின் அடிப்படையில்தான் அனைத்து நறுமணங்களையும் உருவாக்கினான் எனவும் பிரபஞ்சத்தின் எல்லா பூதங்களுக்கும் (Element ) கண்ணுக்கு புலப்படாத ஓர் பரிமாணம் (Dimention ) இருப்பதுபோல் வாசனைகளுக்கும் மனிதன் கண்டுபிடிக்காத ஒன்று இருக்கலாம் எனவும் இருந்தால் அதுவே 13வது வாசனையாக இருக்கவேண்டுமெனவும் சொல்கிறார். ஏற்கனவே வழக்கமான கியூசெப் கற்றுத்தந்த முறையில் அனைத்து பொருளிலிருந்து வாசனையை  பிரித்தெடுக்க முடியாமல் தோற்று விரக்தியிலிருக்கு ஜீன், நுகரும்போதே அதிஉன்மத்த சொர்க்க இருப்பை உணர்த்தும்  அந்த 13வது  வாசனையை  உருவாகும் முடிவுடன் அந்நகரிலிருந்து கிளம்புகிறான்.சில காலம் காட்டில் வாழ்ந்துவிட்டு ஓர் நகரைஅடைகிறான், அந்நகரின் பெரும் செல்வந்தர் அன்டோயின் ரிச்சிஸின் (ஆலன் ரிக்மேன்) மகள் லாராவின் உடல்வாசனைதான் தான் உருவாக்கப்போகும் 13வது நறுமணத்தின் மூலமென நுகர்ந்துணர்கிறான். ஆனால் முன்னதாக 12 நறுமண மூலங்களை தயாரிக்கும் முயற்சியில் 12 பெண்களை கொலை செய்து பிரத்தேகமான முறையில் அவர்களின் உடல் மனத்தை தைலமாக்கி சேமிக்கிறான்,  பின் கடும் காவலையும் மீறி லாராவை கொன்று 13வது நறுமணத்தை உருவாக்கி முடிக்க, பாரிஸ் போலீசால் கைது செய்து மரணதண்டனையளிக்கபடுகிறான். தண்டனைநாளன்று  ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நகரின் மத்தியில் அந்த 13வது நறுமணத்தை பரப்ப,  கூடியிருப்போரும், நீதி மற்றும் காவல் கனவான்களும் சுயஉணர்விழந்து பித்தேறி நிலைக்கு மாறி அவனை தேவதூதுவனென புகழ்ந்து  குற்றமற்றவன் என்றுரைத்து பின் நிகழ்த்தும் காட்சி இதுவரை உலகின் எந்த ஓர் திரைப்படத்திலும் இடம்பெறாதது. இறுதிக்காட்சியில் பாரீஸ்ஸில் தான்பிறந்த மீன்சந்தைக்கு சென்று குப்பியில் மீதமுள்ள அந்த 13வது நறுமணத்தை தன்மீது  முழுவதும் ஊற்றிக்கொள்ள அங்கிருக்கும் சிறு கும்பல் அவ்வாடையில் ஈர்க்கப்பட்ட அவன்மீது மொய்க்கிறது, சிறிது நேரத்தில் அக்கூட்டம் அகல அங்கு ஜீன்-பாப்டிஸ்ட் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை அந்த வாசனை குப்பியை தவிர, அதிலுள்ள கடைசி துளியும் மண்ணில் விழ திரை இருள்கிறது.
 
ஏற்கனவே "Run Lola Run" மூலம் உலக சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான  ஜெர்மனிய இயக்குனர் Tom Tykwer -ன் Perfume என்கிற நாவலை  தழுவிய படைப்பான இப்படத்தின் இயக்கமும், ஒளிப்பதிவும்இசையும், நடிப்பும் சினிமா ரசிகர்கள் பார்த்தே ஆகவேண்டிய படங்களின் பட்டியலில் ஒன்றாக இடம்பிடிக்கிறது செய்கிறது "Perfume" 
 
யா. பிலால் ராஜா