Saturday, July 14, 2012

பறவைக்கூண்டு


நன்றி உயிரோசை- http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=5772




             நீண்ட நாட்களாக தொடர்வாசிப்பிலும் , முடிக்கப்படாமலுமிருந்த ஓரான்பாமுகின் "என் பெயர் சிவப்பு"-ஐ இன்றுடன்  படித்து முடிக்கவேண்டுமென்ற முடிவுடன் சென்னையின்  பெரும்  பரப்பிளமைந்த கிண்டி சிறுவர் பூங்காவிற்கு சென்ற ஞாயிறன்று சென்றேன். சென்னையின் பெரும்பாலான பூங்காக்கள் மிகச்சிறியவை, மாலை  வேளைகளில் உள்ளே சென்றால்  ரங்கநாதன் தெருவை  நினைவுபடுத்தும் கூட்டமிருக்கும்,  புதிய மரமொன்று முளைத்து  வளர வாய்ப்பில்லதபடி கான்கிரிட் நடைதளம், சற்று ஒதுக்குபுறத்தில் மரநிழல் அமர்விடமிருந்தால் காதலர்களின் ஆக்கிரமிப்பு. இந்நகரில்  நான்காணும் அனைத்து  பூங்காக்களின் நிலையும் இதுதான். இதுபோன்ற  நடைபயிற்சிக்கூட்டம், காதலர்  ஆக்கிரமிப்புகளை உள்வாங்கியபின்னும் அமர்வதற்கு இடம் கொண்ட பூங்காக்கள்தான் பெரியபரப்பிலான பூங்காக்கள் என்ற மனஅளவியல்  எனக்கிருக்கிறது. அத்தகைய பரந்தஅமர்விடமும், ஆண்டுமுழுவதும் பசுமை நிழலும் கொண்டிருக்கிறது கிண்டி சிறுவர்பூங்கா. வனத்துறையின் கட்டுப்பாட்டிலமைந்த வனவிலங்குகளின் காட்சிக்கூண்டும் அங்கிருக்கிறது. நுழைவாயிலிளிருந்து சில மீட்டர் தூரத்தில் தெரிந்த ஒரு பெரிய பறவைக்கூண்டினருகில் ஒரு நிழலிடம் பார்த்து அமர்ந்தேன், அதனை பறவைக்கூண்டு என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அது ஒரு பெரிய பறவைக்கூடாரம். நடுவில் ஒரு நீர்தேக்ககுட்டை அதனை சுற்றி சிறிதளவு இடம், சில பல கிளைகளுடன் கூடிய ஒரு மரம் இவை அனைத்தும் மிகப்பெரிய வலைகொண்டு சூழப்பட்டு எந்த ஒரு சிறுபறவையும் தப்பிவிடாதபடி சிறைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலும்  நம்  நிலப்பகுதிகளில் பார்த்திராத அளவில் சிறிதும், பெரிதுமான வெளிநாட்டுப்பறவையினங்கள்தான் அதிகமிருந்தன. அவைகள் உயரம், நிறம், அலகமைப்பு, வடிவம் மற்றும் பாதஅமைப்புகளில் ஒன்றையொன்று  வேறுபடுத்திக்கொண்டிருந்தன. அவைகளின் உயிரியல் பெயர்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கில்லை. பள்ளிப்படிப்பில் இதுபோல் தாவர, விலங்கியல் பெயர்களை நினைவில் வைக்கமுடியாமல் நிறைய தோற்றிருந்ததால் இன்றுவரை புதிய உயிரியல் பெயர்களை நினைவுகொள்வது ஒவ்வமையயிருக்கிறது. சிறிது நேரம் அவைகளையே  கவனித்துக்கொண்டிருந்தேன், சில பறவைகள் கூண்டிற்குள் சிறிது  பறப்பதும், சிலஅடிகள் நடப்பதுமாயிருந்தன. பெரும்பாலானவை  ஒரே இடத்தில்  நின்றுகொண்டும், அமர்ந்தயிடத்தில் அப்படியே சலனமற்று உறைந்தும் போயிருந்தன. அந்த  கூண்டிற்கு வெளிப்புறம் தரையிலும் மரக்கிளையிலும் சில காக்கைகள் நின்றுகொண்டு சிறைபட்ட பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தன. அந்த காக்கைகளின் மனம் ஒருவேளை தன்னைக்காட்டிலும் அழகுமிக்க இனங்களை ரசித்துக்கொண்டிருக்கலாம் அல்லது யெளவனமிக்க அப்பறவைகளின் மீது புணரிச்சை கொண்டிருக்கலாம். மனிதர்களைப்போலல்லாமல் பறவைகளின் கண்கள்  காமத்தை ஒருபோதும் காட்டிக்கொடுப்பதில்லை.  நீர்க்குட்டையின்  அருகிலிருந்த சில பறவைகள் கண்களில்  நான் பார்த்த  அமைதி  "பிரபஞ்சத்தின் பேரமைதி" என்ற  சொல்லுக்கு  உவமை போலிருந்தது. உண்மையில் அப்பறவைகளின் கண்களில் நான்கண்டது, இயல்பான அதன் வாழ்வை இழந்துவிட்ட சோகமாயிருக்கலாம். நாடுவிட்டுநாடு பறக்கும் திறனிருந்தும் சில அடி தூரத்திற்கு மேல் பறக்கமுடியாதது அதன் மனதில் பெரும் துயரத்தை உருவாக்கியிருக்கலாம். மனிதர்களைப்போல்  தற்கொலை எண்ணமற்ற, மற்றும் வழிமுறையும் தெரியாத காரணத்தினால்தான் இவைகள் கூண்டிற்கு அடைபட்டும் உயிரோடிருக்கின்றன என நினைத்துக்கொண்டேன்.



             சிறிது  நேரத்திற்குப்பின் பூங்கா பணியாளர் ஒருவர் அக்கூண்டினுள்  நுழைந்து கொண்டுவந்திருந்த ஒரு கூடையிலிருந்து இறந்து போயிருந்த மீன்களையள்ளி நீர்க்குட்டையினில் வீசியெறிந்தார், பறவைகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக்கொண்டு செத்த மீன்களை விழுங்கத்தொடங்கின. பறவையினங்களின் வாழ்வியல் சுவாரஸ்யமே உணவுக்கான வேட்டையாடுதலில்தான் அடங்கியிருக்கிறது. நீரில் போக்கு காட்டி மறையும் உயிர்மீன்களை ஒவ்வொரு பறவையினமும் ஒவ்வொருவிதமாக வேட்டையாடும்   திறமைதான் இயற்கை அதற்கு அளித்திருக்கும் உயிர்த்திறன். ஆனால் அவைகள் இங்கு செத்து அழுகிய மீன்களை விழுங்கிக்கொண்டிருக்கின்றன. மதங்கள்  மனிதனுக்கு கற்பனையாக போதித்த நரகத்தை, பறவைகளுக்கு நாம் உண்மையாக  உருவாக்கி வைத்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்  கடைவீதியில் என்  நண்பருடன் செய்த விவாதம் ஒன்று அப்பொழுது என் நினைவிற்கு வந்தது, அவர் கடைகளில் விற்கப்படும்  ஒரு சில பறவையினங்களை கூண்டுடன் வாங்கி வீட்டில் வளர்க ஆசைப்பட்டார். நான் அவரிடம் "வனங்களில் திரியும் பறவைகளை சிறிய கூண்டினுள் அடைத்து வைப்பது மிக மோசமான பொழுதுபோக்கு"என்றேன், அதற்கு அவர் "நீங்கள் உண்பதற்கு, உழுவதற்கு, சுமப்பதற்கு, காவலுக்கு ஆடு,கோழி ,மாடு, குதிரை, நாயினங்களை அடைத்து வைக்கிறீர்களே அவைகளை காட்டிற்கு அனுப்பவேண்டியதுதானே" என்றார். அதற்கு நான் "நீங்கள் சொன்ன வளர்ப்பினங்கள் எல்லாம் பல நுற்றாண்டுகளாக மனிதனை சார்ந்து வாழ பழக்கப்பட்டுவிட்டன. அவைகள்  ஒருபோதும் மனிதனை விட்டு விலகி காட்டிற்குள் தப்ப முயற்சிக்கவில்லை. அவைகளை வீட்டிலிருந்து விரட்டினாலும் மீண்டும் உங்களை தேடி வந்துவிடும். ஆனால் பறவையினங்கள்  ஒருபோதும்  மனிதஅருகாமையை  விரும்புவதில்லை, வனங்களை  மட்டும் சார்ந்து வசிக்க விரும்புபவை என்றேன்" ஆனாலும் அவர் சிரித்துக்கொண்டே பறவை விற்கும் கடைகளை வீதியில் தேடிக்கொண்டே நடந்து வந்தார்.  பலமான சிரிப்புசத்தத்துடன் என்னை  கடந்த  காதல்  ஜோடியால்  நினைவு கலைந்து, என்  கூண்டு திரும்பத்துவங்கினேன்,  "என் பெயர் சிவப்பு"-ஐ முடிக்காமலே...

யா. பிலால் ராஜா


Tuesday, March 6, 2012

எதிர்இசைப்பாடகன் - பாடகர் கைலாஷ் க்ஹெர்


This Article published in "Uyirosai" e-magazine- 05-03-2012 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5346


                பசி, காதல்காமம்  போல இசையும் உணரத்தான்முடியும், ஒருவர் மற்றவர்க்கு உணர்த்த முடியாது என நினைகிறேன். ஆனால் அறிமுகம் செய்ய   முடியும். நான் ரசித்த ஓர் வடஇந்திய  இசை ஆளுமை பற்றிய அறிமுகம்தான் இந்த கட்டுரை.

பள்ளி வயதிலிருந்து சினிமாசார்ந்த ஒரு இசைதொகுப்பு வெளிவந்தால் அது A R ரஹ்மானின் இசை தொகுப்பு என்றால் உடனே எப்படியாவது வாங்கியோ, மியூசிக்கல்ஸ்   வைத்திருப்பவர்களிடம் நட்புகொண்டோ கேட்டுவிடுவது வழக்கம், ஒவ்வொரு தொகுப்பிலும் புதிய பாடகர்கள், திறமையான இசைக்கலைஞர்கள், புதுமையான தாளஒலிப்பதிவு   அறிமுகம் நிச்சயம் இருக்கும். என் பள்ளிப்பருவத்திலிருந்து அவர் இசையின்மொழி எனக்கு பரிட்சயம் என்பதால் கடந்த 15 + ஆண்டுகளில்  என் கொண்டாட்ட தருணங்களில்  அவரின் இசைக்கு முக்கிய பங்கு உண்டு.
பெங்களூரில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சில உடைகளை தவிர்த்து வறுமையும், வெறுமையும் எப்போதும் உடனிருந்தது, அப்போது  ரஹ்மான் இசையில் லகான் பட இயக்குனர் அஷுடோஷ் கோவரிகர்-ன் இயக்கத்தில்  swadesh என்ற ஹிந்தி படம் ரிலீஸ் ஆகிருந்தது, அப்போது நானிருந்த சுழலில் பாடல் கேட்ப்பதற்கோ, டிவி பார்ப்பதற்கோ வாய்ப்பில்லை,  அதனால் ஒரு நல்ல தியேட்டரில்  படம்/பாடல்  பார்க்கலாமென்று  பெங்களூர் PVR -இல் சென்று பார்தேன். அந்த  சமயத்தில் டிக்கெட் விலையான 120 ரூபாய்க்கு  என் பட்ஜெட்டில்  பணம்  ஒதுக்கியது  ஒரு  குட்டி  சாகசக்கதைக்கு ஒப்பானது. எதிர்பார்ப்புடன் சென்ற 
எனக்கு, படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் படக்கதையில் எந்த  ஈர்ப்புமில்லை,
ஆனால் பாடல்கள் ரசிக்ககூடியதாக இருந்தது, படம் முடிந்த பின்,  இந்த இசைத்தொகுப்பில் சற்று புதுமையாக  நான் உணர்ந்தது, படத்தில் முதல் பாடலில் (Yun Hi Chala Chala... ) ஷாருக் தன் சொந்த  ஊருக்கு செல்லும் வழியில் ஒரு வழிப்போக்கனை தன் வாகனத்தில் அழைத்துச்செல்லுவார். அப்போது ஷாருக் உதித்நாராயண் குரலிலும், வழிபோக்கன் ஒரு வித்தியாசமான குரலிலும் பாடக்கேட்டேன்.                                                                  



             பொதுவாக நாம், இந்திய திரைப்பட இசைச்சுழலில்   கேட்கும்  குரல்கள்  வழவழபாக, பிசிறற்ற,ரொமாண்டிக் குரலாகதான் இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மறையான இசை / குரல்  சினிமாவில்  கேட்பது  மிக அரிது,அப்படிப்பட்ட ஆளுமைகள் இந்திய நாட்டுப்புற இசைவெளிகளில் 
கணக்கற்று பரவியிருந்தாலும் வணிக திரைப்பட இசைக்களங்களில் 
அவர்களை  சிறப்பாகப்பயன்படுத்துவது மிகக்குறைவுதான். இந்த பாடலின் குரல் அப்படிப்பட்ட தனித்தன்மை கொண்ட குரலாக   எனக்குப்பட்டது,   சில மாதத்திற்குபின் நண்பர்களுடன் பெங்களூர்- இந்திரா நகரில் உள்ள ஒரு தியேட்டரில் அமீர்கானின்  "Mangal pandey "(இசை : ரஹ்மான்)திரைப்படம் பார்க்கசென்றேன்.(இந்த காலகட்டத்தில்  வாரத்தில்  இரண்டு  திரைப்படம் பார்க்குமளவிற்கு வசதி வந்துவிட்டிருந்தது.) படம் முடிந்து
வெளி வந்த பின்னும் "மங்கள.... மங்கள..." என்ற பாடல் மீண்டும் மீண்டும் எனக்குள் கேட்டு கொண்டே இருந்தது, காரணம் swadesh பாடலில் கேட்ட அதே  வித்தியாசமான குரலின் ஈர்ப்பு. இந்த படத்தின் முன்று சுழலில்  இப்பாடல் வருகிறது. மொழி எல்லைகளைக்கடந்து பாடல் கேட்கவும்  பழகியிருந்ததால் பீகார், ஒரிசா, பெங்கால் தொழிலாளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் வசித்த சமயங்களில் விடுமுறை நாட்களில்  தொழிலாளர்கள் அனைவரும் டோல் இசைத்துக்கொண்டு வட பிராந்திய  நாட்டுப்புற பாடல்கள்பாடுவதை கேட்டு ரசித்திருக்கிறேன். என்  அறையில்  என்னுடன் தங்கியிருந்த  மராத்தி ஒருவர் மராத்திய நாட்டு புறபாடல்களை பாடுவதில் ஆர்வம் உள்ளவர், அவரிடம் "மங்கள.... மங்கள..."  பாடலின் பாடகரை பற்றி கேட்டபோது, அவர் பெயர்கைலாஷ் க்ஹெர்என்றும் வடஇந்திய நாட்டுப்புற, சுபி இசை பாடல்களை பாடுவதில் புகழ் பெற்றவரென்றும் எனக்கும் அவர் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார். "வடஇந்திய நாட்டுப்புற இசைவடிவம்" என்று நாம் பொதுவாக சொல்லிவிட்டாலும், என் கேட்பனுபவதில் குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஒரிசா முக்கிய மாநிலங்களின் நிலவியல் அடிப்படையில் நாட்டுப்புறபாடல்களில் நிறைய  வேறுபாடுண்டு  கைலாஷ் க்ஹெர் -ன் குரல் இவை அனைத்திற்கும் பொருந்தக்கூடியாது
என நினைக்கிறேன். இந்தக்கட்டுரையை பகிரத்தூண்டிய  மங்கள... மங்கள...  பாடலை   கீழ்   கொடுத்துள்ள   கண்ணோளியில் கேட்டுப்பாருங்கள். 
(http://www.youtube.com/watch?v=3-a_gabfEXA)



என்னை பொறுத்தவரை இந்தக்கட்டுரையில் நான் குறிப்பிடும் பாடல்களை கண்ணொளியில் காண்பதைக்காட்டிலும்  அந்தந்த இசைத்தொகுப்பினை முழுவதும் பதிவிறக்கம் செய்து கேட்பது கைலாஷ் க்ஹெர்-ன் குரலாளுமையை முழுவதும் உள்வாங்க உதவலாம்.
பின்நாளில்  இணையத்துடன் இணக்கமாக இருந்த காலங்களில் அவரால் பாடப்பட்ட பல பாடல்களை கேட்டேன். 1973 - ல் மீரட்டில் பிறந்த இவர் வியாபார தோல்வி கண்டபின் இசை ஆர்வமுள்ள நண்பர்களுடன்  இசைத்துறைக்கு வந்தவர், 2002 ல் Andaaz என்ற படத்தில் முதல் பாடல் பாடினாலும், Waisa Bhi  Hota Hai என்ற படத்தில் சூபி இசை சாயல் கொண்ட  Allah ke Bande என்ற பாடல் மூலம்தான்  இவர் குரல் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். (http://www.youtube.com/watch?v=9Ered22Xy4E&feature=related )

 இக்கட்டுரையில் கொடுத்திருக்கும் பாடல்களை அலுவலக அவசரத்திலோ, மொழியை முதன்மைபடுத்தியோ, வழக்கமான டூயட் பாடல் அளவுகோலுடனோ ஒப்பிடாமல் கேட்டுபாருங்கள். இவரின் பாடல்களில் அடிப்படை சூபி இசை வடிவமே பெரும்பான்மையாக காணப்படுவதால், இந்தியாவின் முக்கிய சூபி இசை பாடகராக கைலாஷ் முன்னிலைப்படுத்தப்படுகிறார். திரைப்படங்களில்
 பாடிக்கொண்டிருந்தாலும் தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து 
இசைத்தொகுப்புகளை கொண்டுவருவதுதான் இவரது ஆர்வமாக இருக்கிறது.
 2006 -ல் வெளிவந்த 'kailasa' என்ற தொகுப்பிலுள்ள 'Teri Deewani ' என்ற பாடல் எப்போதும் என்  விருப்பத்திற்குரியது. கைலாஸ்-ன் பாடல்களில் குரல் மற்றும் மெட்டமைப்பிற்கு பின் முக்கிய  இடம் பிடிப்பது நரம்பிசை கருவியான   'கிடார்' தான்.
  
(http://www.youtube.com/watch?v=B6CqANW49J0&feature=related)
 'டெல்லி-6 ' படத்தில் 'Arziyan ' என்ற அதிஅற்புதமான சூபி  இசைப்பாடலில்  kailash kher  குரலும் கலந்திருக்கும். தமிழில்  G.V. பிரகாஷ் குமார்  இசையில் 'வெயில்' படத்தில் 'வெயிலோடு விளையாடி......'-யதில் இவர் குரலும் ஒன்று. இவரின் இசைத்தொகுப்பின்  பாடல்வரிகளை  பெரும்பாலும் இவரே  புனைகிறார். சென்ற மாதம்' Rangeela 
என்ற தனது புதிய இசைதொகுதியை வெளியிட்டிருக்கிறார். இந்தகட்டுரையின் நோக்கம் அடுத்து வரும் முற்றுப்புள்ளியுடன் நீங்கள் 
படித்து  முடித்து விடுவதல்ல, கைலாஷ் கஹெர்-ன் இசையை நீங்கள்   இக்கட்டுரையின்    கண்ணொளி தவிர்த்து  மேலும் தேடிக்கேட்பதுதான்.

யா. பிலால் ராஜா