Saturday, June 29, 2019

அம்பேத்கரும் அவரது தம்மமும்



அத்தியாயங்களின் துவக்கத்தில்  மார்க்சின் புகழ் பெற்ற "மதம் ஒரு அபின் " சொற்றொடர் உள்ளடங்கிய ஓர் பக்கம்  இருக்கிறது, மறுபக்கம்  அம்பேத்கரின் மார்க்ஸ் சொன்னதற்கு முற்றிலும் எதிர் "பதங்களை" கொண்ட இன்னொரு பக்கம் இருக்கிறது, இந்த இருஅடுத்தடுத்த பக்கங்களுக்கிடையேயான கருத்தியல் தூரம்தான் தொடந்துவரும் 900+ பக்கங்கள்

முதலில் பாராட்டியாகவேண்டியது இந்நூலுக்கு பின்னாலுள்ள அபாரஉழைப்பை, வசுமித்ரவின்  20 ஆண்டுகால வாசிப்பை, கருத்தியல் கற்றலை இவ்வளவு கூர்மையாக இந்நூலுக்கு அடிப்படையாக வைத்திருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். பொதுவாக அரசியல் / கருத்தியல் சார்ந்த ஆய்வு நூலை வாசிப்பது பெரும் அலுப்பூட்டக்கூடியது, இவ்வகை எழுத்துக்கள் என்னளவில் இருவகை. ஒன்று வாசிப்பவரை உள்ளிழுக்கமால் தனித்து நிற்ப்பது ஒருவகை எனக்கொண்டால்,  வாசிப்பின் வழி நூலாசிரியர் வாசகனுடன் உரையாடுவது இரண்டாம் வகை, இந்நூல் நிச்சயம் இரண்டாம் வகை.

மார்க்சியம் / கம்யூனிசம் கற்றுக்கொள்ள, முழுப்பரிமாணத்தை புரிந்து கொள்ள நிச்சயம் வாழ்நாளில் ஒரு பகுதியை முற்றாக செலவழிக்க வேண்டும், அதைபோல் பௌத்த தத்துவங்களையும் அம்பேத்கரது படைப்புகளையும் குறைந்தபட்சம் வாசித்துஉணர காலத்தை மட்டுமல்ல மனதையும் அதன் பாதையில் எடுத்துசென்று அமர்த்த வேண்டும். வாசிப்பு ஒரு தவமாகமாறினாலொழிய இது வாய்ப்பில்லை, வசுவின் தவத்திற்கு வாய்த்திருக்கும் வரங்களில் ஒன்று இந்நூலெனக்கொள்வேன். இதனை மேற்சொன்ன தத்துவங்களைப்பற்றி  நுனிப்புல்மேய்ப்பாக வாசித்தறியமுயன்ற  ஒரு சராசரி வாசிப்பாளனாக அதனை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

அம்பேத்கர் என்ற பெயரை கேட்டவுடன் இன்று மேடைகளில்/ youtube பேச்சாளர்களின் தலித்அடையாள அரசியல் மற்றும் அது சார்ந்த  விவாதங்கள்தான் நம்முன் விரியும். பலகாலமாக பொதுசமூகத்திற்கு (பள்ளிவயதிலிருந்தே) அம்பேத்கர் இந்திய அரசியல் சட்ட மாமேதை எனவும் தாழ்த்தப்பட்ட சமூக விடுதலைக்கு அதை நோக்கிய போராட்டத்திற்கு இந்தியா முழுமைக்கு பெரும் புரட்சியை முன்னெடுத்தவர் எனதெரியும். சந்தேகமேயில்லாமல் இன்று அது பெரும்வளர்ச்சியையும் விழிப்புணர்வையும் இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது, இதற்காக அவரின் பிம்பத்தை வைத்து அடையாள அரசியல் செய்வது கூட ஓரளவு தப்பில்லை என தோன்றுகிறது. காரணம் அச்சமூகம் காலங்காலமாக தன்னில் வாங்கியிருக்கும் வலிஅப்படி, அந்தந்த இடத்தில் வாழ்ந்ததால்தான் அதற்குரிய வலி புரியும். அடக்குமுறைக்கு உட்படும் எந்த சமூகமும் சரியோ தவறோ எவ்வழியிலாவது வெகுண்டெழுந்து கொண்டுதானிருக்கும்  இது ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அனைத்து சமூகத்திற்கும் பொது ....    சரி... அதெல்லாம் தனிப்பெரும் விவாததளம் இங்கு அது பற்றியல்ல.  இந்த தற்கால அரசியலை இந்நூல் பேசவில்லை ஆனால் வசுமித்ர நம்மை அழைத்து செல்வது அம்பேதகர் நேரடியாக சமூகத்திற்கு முன்வைத்த கொள்கைகளை/தத்துவங்களை பற்றிய விவாதத்திற்கு அதிலும் குறிப்பாக பௌத்தம் குறித்து.

நானுணர்ந்த நூலின் கருப்பொருளை பற்றிய பொதுசுருக்கம் இதுவே ..….

சாக்கியகுல இளவரசர் சித்தார்த்தன் தன்னை சுற்றி நடக்கும் மனித துயரங்களை துக்கங்களை கண்டு, இவை ஏன் மனிதமனதை பெரும் துக்கத்திற்கு ஆட்படுத்துகிறது என்ற கேள்விக்கு விடைதேடி ஒரு சிந்தனைப்பாதையை தேர்ந்தெடுக்கிறார். அந்த காலகட்டம் ஆரிய -பார்ப்பனர்களின் வர்ணக்கோட்பாடு சமூகத்திற்குள்ளும், அரச-அதிகார மட்டத்திற்குள்ளும் பல கதைகளைக்கொண்ட கடவுள்வழிபாடு / யாகசடங்குகளுடனும் தன் பலத்தை பெருக்கிக்கொண்டிருந்தது. ஆனால்  புத்தரின் தத்துவஅடிப்படையே பகுத்தறிவின்பாற்பட்ட  கடவுள்/சடங்கு மறுப்புதான். ஆகா வர்ணவேறுபாட்டிலிருந்து வெளியேற அக்காலத்திலேயே சங்கம் ஒரு வழியாக இருந்திருக்கிறது. ஆனாலும் உலகில் எந்த அமைப்பும், மதமும் கொள்கை/ தத்துவ விடையளித்தலில் 100% முழுமையடையாததுதானே. அதற்கு பௌத்தமும் விதிவிலக்கல்ல, பல சமரசங்கள் செய்யவேண்டியிருந்திருக்கும். அவருக்குபின் சங்கத்தில் சமரசம், மற்றும் கருத்துபுரிதலின் அடிப்படையில் பல பிரிவில் தோன்றின (ஹீனயானம், மகாயானம் & etc …) அதன்பின் ஆரிய-பார்ப்பன-இந்து மதம் இந்தியாவின் சிறு குறு தெய்வ வழிபாட்டு இனக்குழுக்களை தனது பெரு தெய்வவழிபாட்டுக்குள் உள்ளிழுத்து தத்துவதளத்திலும் பெருவிரிவடைகிறது. அத்தகைய பன்முகத்தன்மை கொண்ட இந்து மதத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய நிலப்பரப்பில் பௌத்தம் ஒடுங்குகிறது.  

இப்போது 19ம் நூற்றாண்டிற்கு வருவோம்  சாதி வர்ண பேதம் இந்தியாவெங்கும் காற்றைப்போல நீக்கமற நிறைந்த காலகட்டம்  ஒருபுறம் பிரிட்டீஷ் அரசுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது, இன்னொருபுறம் அம்பேதகர் போன்ற தலைவர்களால் சாதிய கொடுமைக்கு எதிரான சமூக விடுதலை போராட்டமும் சேர்த்து முன்னெடுக்கப்படுகிறது, அந்நியரை வெளியேற்றினாலும் சாதி கட்டமைப்பை  உடைக்க முடியவில்லை என மனம் வெறுத்து " இந்துவாக பிறந்த நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன்" என்கிறார். (இதே கருத்தின் அடித்தளத்தில்தான் பெரியார் மக்களுக்கு சமூக விடுதலை அளிக்காமல் அரசியல் விடுதையால் எந்த பலனுமில்லை என்று ஆகஸ்ட் 15 ஒரு கருப்பு தினம் என்கிறார்) 
அப்போது அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மார்க்கம் தேந்தெடுக்க தேவை வருகிறது. அவருக்கு முன்னாலிருப்பது இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பௌத்தம். இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்டோர் சமூகத்தை இஸ்லாம்/ கிறித்தவதிற்கு மதம் மாற்றுவதென்பது கலாச்சார பண்பாட்டில் அவர்களை அந்நியப்படுத்தி விடும் சீக்கியமும் பௌத்தமும் மட்டுமே இம்மண்ணின் கலாச்சார பின்புல மதமெனக்கொண்டு  பௌத்தத்தை தேர்வு செய்கிறார்.  அப்போது ஒரேதளத்தில் பயணித்தவரான பெரியார் அவரை சந்தித்து உங்கள் பௌத்ததேர்வு தவறானது சாதி இழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வாக இருக்குமென பகிரங்க அறிவுறுத்தலை முன்வைக்கிறார். காரணம் பௌத்தம் கடந்த 2000 ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டதையும் இனி வரும் காலத்திலும் பார்ப்பனிய வர்ணாசிர தருமம் அதனை எளிதில் உட்செரித்து முன்னகர்ந்துவிடுமென தீர்க்க தரிசனமுறைக்கிறார். அதனை  அம்பேத்கர் நிராகரிக்கிறார். இந்நூலின் கருப்பொருளை ஒட்டி இது ஒரு முக்கியமான விவாத பொருள் ஆனால் இந்நூலில் வசுமித்ர இத்தளத்தை பெரிதாக விவாதிக்கவில்லை.

ஆக இந்திய தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பௌத்தத்தை ஒரு தீர்வாக முன்வைத்ததும் புத்தரை புனிதப்படுத்தி தொழுஉருவாக மாற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்ட அம்பேத்கர் " புத்தமும் அவரது தம்மமும்" நூலை எழுதுகிறார். கடவுள்மறுத்தது பகுத்தறிவு பாதைக்காக தோன்றிய பௌத்தம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிற்சேர்க்கையாக பல கதைகள்/விளக்கங்கள் புகுத்தப்பட்டு இறுதியில் மீண்டும் ஒரு சராசரி தொழுஉரு  கடவுள்வழிபாடாக மாறி நிற்கிறது, ஏன் புத்தரின் மறுஜென்ம வினாவுக்கான "கர்மா - வினை" பதிலே பகுத்தறிவு விவாதத்தில் காலூன்றி நிற்க முடியாததுதானே?
அதனை அம்பேத்கரது  " புத்தமும் அவரது தம்மமும்" நவயானபௌத்தமாக வழிமொழிகிறதென்பதே வசுமித்ராவின் "அம்பேத்கரும் அவரது தம்மமும்" நூலின் விவாதப்பொருள். புத்தமடைவதற்கான 32 அங்கலட்சணங்களை கொண்டவர் சித்தர்தனென பௌத்த வழித்தோன்றல்கள்சொல்வதை எந்த தர்க்கவிவாதமின்றி அம்பேதகர் ஏற்று புகழ்வது இந்நூலின் முக்கிய விவாதப்பகுதி. பல மார்க்சிய எழுத்தாளர்களின் பௌத்த/அம்பேத்கரிய மேற்கோள்களை எடுத்தாண்டிருப்பினும் எனக்கு அதிகப்படியான பக்கங்களும் கருத்தியல் அடர்த்தியும் சில இடங்களில் சோர்வு தந்தது, பக்கங்களை இன்னும் குறைத்திருக்கலாம், இது எனது பார்வை மட்டுமே, ஒருவேளை இந்த அரிதான விவாதத்திற்கு இந்த அளவு நியாயமாக இருக்கலாம்.  

அம்பேதகர் இன்று இருந்தால் நிச்சயம் இதனை ஒரு ஆரோக்கிய விவாதமாக எடுத்துக்கொள்வார், காரணம் நான் கேள்விப்பட்ட வரையில் இந்தியாவில் தனிநபர் நூலகமாக 64000 புத்தகங்ளுக்கும் மேல் சேகரித்து படித்தவர் அம்பேத்கர், சமூக/அரசியல் பற்றி 7000 பக்கங்களுக்கு மேல் எழுதியவர் நிச்சயம்  இத்தகைய கருத்தியல் விவாதத்தை ஆதரிப்பார். 

நூலை முழுவதும் முடித்தபின் எனக்குள் எழுந்த கேள்விகள் ….
இன்று அனைத்து தலித்திய அம்பேத்கரிய கட்சிகளும் இயக்கங்களும் சட்டப்புத்தகம் தாங்கிய நீல கோட் அணிந்த அம்பேத்கார்
உருவஅடையாளங்களை மட்டும் காட்சிப்படுத்துகின்றன, சாதி விடுதலையை முன்னிறுத்தி "துவராடை" அணிந்த பௌத்தஅம்பேத்கர் எங்கே?
அவர் வழிகாட்டி சென்றபடி இந்திய தலித்தியசமூகம் பௌத்ததை ஏன் பற்றி தொடரவில்லை?

எல்லாவற்றையும் விட இங்கு பௌத்தம் எங்கே ??

யா. பிலால் ராஜா 






1 comment: