Wednesday, November 17, 2021

பாட்டுக்குறிப்புகள் 

மேகமும் பாதமும் (குறிப்பு - 1)

மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டில்தான் அந்த தெருவுக்குள் ஒரு மாடிவீட்டில் குடிபோனோம், ஒரு மாட்டுவண்டி மட்டும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் உருண்டோடக்கூடிய அகலம் கொண்ட அந்தக்காலத்து அக்ரஹாரா வடிவிலான வீடுகள் நிறைந்த தெருவது. நான் குடியிருந்த வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் சிறுதிண்ணையுடன் கட்டப்பட்ட எதிர் ஓட்டுவீட்டில் கதவினை ஒட்டிய ஒரு தாழ்நிலை ஜன்னல் தெரியும். அந்த வீட்டிலிருப்பவர்கள் அந்த ஜன்னல்அண்டை வந்தால் முகம் தெரியாது தாழ்வாரம் மறைத்துக்கொள்ளும், நிற்பவரின்/கடப்பவரின் கால்கள் மட்டுமே பெரும்பாலும் தெரியும். பள்ளி, டியூசன், விளையாட்டு, விடுமுறை நாளில் எங்கள் தோட்டத்தில் அப்பாவுடன் விவசாய உதவி வேலை என என்பொழுது கழிந்துவிடும். எப்போதாவது பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். முன்சொன்ன எதிர்வீடு ஒரு கூட்டுக்குடும்பமாதலால் வகைவகையான கால்கள் அந்த ஜன்னலில் நின்று/கடந்து கொண்டிருக்கும். தெருவில் நடந்து கடக்கும் முகங்களை காட்டிலும் இந்த எதிர்வீட்டு ஜன்னலில் தெரியும் கால்கள் இன்னும் சுவராஸ்யமாக இருக்கும். நடுத்தரவயது கருத்த, உழைக்கும் கணுக்கால்கள், மெட்டியும் மருதாணியும் பூசிய பல பெண்களின் கால்கள், சுருக்கமும் நரம்பும் போர்த்தப்பட்ட முதிய கால்கள், குழந்தைகளின் நடைபழகும் கால்கள்... .. ஒரு விடுமுறை நாள் பால்கனியில் நின்றிருந்தேன் அதிகாலை சூரியஒளி எதிர்வீட்டு ஜன்னலில் வழி தரையில் படிந்திருந்தது, அக்காலையில் எந்த கால்களும் கடக்காத ஜன்னலை புதிதாக ஒருஜோடி கால்கள் கடந்தது, உறைந்து விட்டேன், அதுநாள் வரை எவ்வளவோ கால்கள் என் கண்களை கடந்தது போயிருக்கிறது, அதுவும் இப்படியொரு இளம்பெண்ணின் சிவந்த அழகியகால்களை வாழ்வில் பார்த்ததில்லை. மெதுவாக நடந்து ஜன்னலருகில் வந்தது அந்த ஓவியத்தில் கூட கொண்டுவர முடியாத சிவப்பழகு கால்கள். அவள் கால்கள் தரையில் பதிந்ததும், தரைதொட்ட பாதம் மட்டும் ரத்தசிகப்பு நிறமாகியது, தரை பிரிந்ததும் இயல்நிறத்திற்கு திருப்பும் பாதங்கள் மீண்டும் தரைதொட மீண்டும் ரோஜா பூவை போல் சிவந்துவிடும் அவ்வளவு சிவந்த மென்மையான பாதங்கள்அவை. அந்த அதிகாலை சூரிய ஒளியில் இந்த காட்சி அத்துணை படிக சுத்தமாக தெரிந்தது. அதுவரை காடுகரை, வயல்வெளிகளில் அலைந்து உழைத்து கருத்த, வேம்பின் முற்றிய கிளைகளையொத்த கால்களை மட்டும் பார்த்த என்னை, இந்த காலைக்காட்சி கால்களில் ஆணியடித்து அந்த கணத்தில் நிறுத்திவிட்டது. பல நாட்கள் அக்கால்களின் தரிசனத்திற்க்க்காக என் ஒற்றை காலில் பால்கனி தவமிருந்திருக்கின்றேன். அபூர்வமாக என்றாவது ஒருநாள் வரம் கிடைக்கும். என் தந்தைக்கு ஒரு பழக்கமிருந்தது முகச்சவரம் செய்யும்போது மட்டும் ரேடியோவை அருகில் வைத்து பாட்டு கேட்பார், அப்படியொருநாள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த ஒரு பாடலில்....
"வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
.செவ்வானம் போல் ஆச்சு..."
அசந்துவிட்டேன், கவிஞர்கள் எத்தனையோ காதல்/பெண் வர்ணனை/அழகியல் பாடல்களை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இப்படியோர் காட்சி எனக்குகிட்டியதைப்போல் இன்னொருவர் ரசித்துணர்த்து ஒரு பாடலில் நான்கு குறுவரிகளில் எழுதியிருக்கிறார், நினைக்கையில் பரவசமாயிருந்தது. அதன் பின் வீடு மட்டுமல்ல வாழ்க்கையே மாறிவிட்டது, எத்தனை பத்தாண்டுகளாயினும் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அந்த ரோஜாசிவப்பு பூம்பிஞ்சு பாதங்கள் என்முன் ஒருமுறை நடந்துபோகும். பாலு மகேந்திரா - இளையராஜாவின் "நீங்கள் கேட்டவை" படத்தில் இந்த ரசனையை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.
(பொறுப்பு துறப்பு:- இது என் நண்பரின் அனுபவம், சொல்லக் கேட்டு "மானே தேனே" போட்டு வரி வடிவப்படுத்தியது மட்டுமே நான்)

Song:-
https://www.youtube.com/watch?v=5SnY3H-0VlQ

- பிலால் ராஜா 

=========================================================================

உசிலம்பட்டி சீனிசேவும் ஓவியாவும்  
(குறிப்பு - 2)



சின்னவயசுல உசிலம்பட்டில சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போகும்போதோ, மதுரைக்கு அவ்வழியா பஸ்ஸில் கடக்கும்போதோ,உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட்க்கு எதிரில் கம்மாக்கரை கடைகளை விரும்பி வேடிக்கை பார்ப்பேன், வரிசையா பெரிய பெரிய சட்டிகளில் சீனிச்சேவு, காராச்சேவு, மிக்சர் என வண்ணமயமாக குவித்து வைத்திருப்பார்கள். என் உயரத்திற்கு குட்டிமலையாட்டம் எல்லாப் பக்கமும் கூர்முனைகண்ணில்உறுத்த குவித்துவைத்திருக்கும் சீனிச்சேவ பாக்குறப்பவே... உடம்பெல்லாம் வாயாக்கிகிட்டு அப்படியே ஓடிப்போய் உள்ளே குதித்துவிடத்தோன்றும். சிலகாலத்திற்கு பின் கம்மாக்கரை ஆக்கிரமிப்பு அகற்றலில் அனைத்து கடைகளும் காலிசெய்யப்பட்டன. 18 பட்டிக்கும் ஒருகாலத்துல தீனிக்கிடங்காக இருந்த அந்த கடைகள் எதுவும் இப்போது இல்லை. அப்புறம் வயசும் வருசமும் போகப்போக அந்தக்காட்சியெல்லாம் மறந்துபோயிற்று, பேருக்கு ஒன்றிரண்டு கடைமட்டும் பஸ்ஸ்டாண்டில் இன்றும் இருக்கிறது.
சமீபத்துல மதயானை கூட்டம் படம் பார்த்தபோது படத்தோட சீரியஸ்ல பாட்டை சரியாக கவனிக்கவில்லை. கொஞ்சநாள் கழிச்சு "கோணக் கொண்டக்காரி" பாடலை ஆறஅமர பார்க்கும்போது தான் உணர முடிந்தது, நான் ஒருபுறம் சேவுக்கடைகளை நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த பாட்டை எழுதிய கவிஞர் ஏகாதசி ரோட்டுக்கு இன்னொருபக்கம் நின்று பாத்துக்கிருந்துருப்பாப்டி போலருக்கு. கண்ணில் உறுத்தும் ஓவியாவின் அழகை, காதுக்கு உறுத்தாமல் பாட்டுல எழுதியிருக்காரு கவிஞர் ஏகாதசி.... சீனிச்சேவை கொறித்தபடி.
" சோளதட்ட தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அல்லிப்பூ ரெண்டுதான்
போரால சாவில்ல மாராலதான் சாவு
கூரால தாக்குதே உசிலம்பட்டி சேவு.."

Song:-
https://www.youtube.com/watch?v=ovYSmZj85Es&list=RDovYSmZj85Es&start_radio=1

Bhilal raja

No comments:

Post a Comment