Monday, October 24, 2011

ஆதாமின்டே மகன் அபு

ஆதாமின்டே மகன் அபு - சொற்களற்ற பதிலுக்கான வினாக்கள் 
This Article published in literary e-magazine "Uyirosai" (uyirmmai publications)24-10-2011 issue
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4923

writer Jayamohan posted his commnet about this article, in his blog...
http://www.jeyamohan.in/?p=22250

This article is mentioned in "VALAICHARAM"
http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_10.html

 

 

மலையாள மொழியில் திரையரங்கில்சென்று  படம் பார்த்து  எத்தனை ஆண்டுகள் ஆனது  என்று நினைவில்லை,  காரணம்   சமீபத்தில்  அப்படி எந்த மலையாள சினிமாவும் அவசியம்  பார்க்கும்படி  தூண்டவில்லை.
சில மாதங்களுகு முன் 2010 - ம் ஆண்டிற்கான 58 வது  தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது  சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் , சிறந்த பின்னணிஇசை,சிறந்த ஒளிப்பதிவு  பிரிவுகளில் விருதுகளை வென்ற "ஆதாமின்டே மகன் அபு"திரைப்படம்  பற்றி செய்திகள்  படித்தபோது அதனை பார்க்கவேண்டுமென ஆசைப்பட்டேன். இதே விருது பட்டியலில் வணிகரீதியில் வெற்றிபெற்ற ஆடுகளம், எந்திரன் படம் பற்றித்தான் மீடியாக்கள் புளங்கிதம் கொண்டிருந்தன. சிறந்த நடிகருக்கான விருதை தனுசுடன் பகிர்ந்துகொண்ட சலீம் குமார், சிறந்த பின்னணி இசைக்கான விருது வென்ற இசாக் தாமஸ்(சிறந்த பாடலாசிரியர்க்கான  விருதையும் வைரமுத்துவுடன்  பகிர்ந்துகொண்டார்) , சிறந்தஒளிப்பதிவிற்காக   மது அம்பட் பற்றி எந்த விவாதமும் மீடியாக்களில் அதிகம் இல்லை. (இதன் முக்கிய காரணம் இந்த திரைபடத்திற்கு   எந்த பொருளாதார பலம் கொண்ட குழுமங்களின் வணிகமும் ,விளம்பர பின்னணியும் இல்லையென்பதால் என நினைக்கிறேன்). சரி திரையரங்கில் சென்று பார்த்து விடலாம் என்றால் சென்னையில் எந்த திரையரங்கிலும் வெளியாகவில்லை. திருட்டு DVD யில் படம்பார்ப்பது பற்றி கடலளவு தீமை பற்றி பேசினாலும், ஒரு துளி நன்மை என்னவென்றால் வணிக ரீதியில் வெளியிடப்படாத அல்லது திரையரங்கிற்கு வர வாய்ப்பில்லாத தரமான திரைப்படங்களை, உலக சினிமாக்களை என்னைபோன்ற சராசரி திரைப்பட ரசிகனுக்கு பார்க்கும் வாய்ப்பு இதுபோன்ற வழியில்தான் கிடைக்கும்.


அத்தகைய வழியில் கிடைத்த DVD யில் படம் பார்க்க துவங்கியதும் சில நிமிடங்களில் அதன் தரமான ஒளிப்பதிவு முதலில்  நம்மை அந்த கதை களத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகிறது. அடுத்தது சலீம் குமாரின்  நடிப்பு , மலையாளத்தில் காமெடி/மிமிக்ரி நடிகரான  சலிம்குமாரின் உண்மையான  வயது 43 தான் ஆனால் 60 வயதை கடந்த முதியவர் பாத்திரத்தில்
இந்த படத்தில் அற்புதமான உடல் மொழியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் கதை, கேரளாவில் ஒரு சிறிய ஊரில் வாழும் ஏழை/முதிய இஸ்லாமிய தம்பதிகள் வாழ்வில் ஒருமுறையாவது புனித ஹஜ் கடமையை ( இஸ்லாத்தில் 5 முக்கிய கடமைகளில் இறுதியானது) நிறைவேற்ற பேராவல் கொண்டு, முயற்சித்து அதன் முடிவு என்னானது  என்பதுதான்.


      சில  மசூதிகளை கடந்து போகும்போது அதன் வாசல்களில்   சிறிய தரைவிரிப்பின்மேல் சிறு சிறு குப்பிகளில் அத்தர் வாசனை திரவியங்களையும், (இஸ்லாமியர்கள் அதிகமாக அத்தர் உபயோகிக்க காரணம் அதில் மற்ற வாசனை திரவியங்களில் இருப்பது போல்   ஆல்கஹால் இருக்காது, இஸ்லாத்தில்  ஆல்கஹால் தடை செய்யப்பட்ட பொருள்)  குரானின் வாசகங்கள் பொறித்த சிறிய சுவரொட்டிகளையும் பரப்பிவைத்து விற்பனை செய்பவர்களை  கவனித்திருக்கிறீர்களா? அதுபோன்ற சிறு ஏழை வியாபாரி "அபு " என்ற கதாபாத்திரம்தான் சலீம் குமார் நடித்திருப்பது, அவரின் உடல் மொழி மட்டுமல்ல அவரின் வசனமும் துல்லியமாக, நுட்பமாக இந்த படத்தில் உருவாகப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை ஒன்று சேர்த்து ஒரு நம்பிக்கையான Travel agency மூலம் ஹஜ்  பயணத்திற்கு
ஆயத்தமாகிறார், ஆனாலும் பண பற்றாக்குறைக்கு தனது மனைவியின் நகை, சிறிய வருவானதிற்கு ஆதாரமான  கால்நடைகள் அனைத்தையும் விற்று பணம் சேர்க்கிறார், இறுதியாக  50 ஆயிரம் ரூபாய்க்கு தனது விட்டிற்கு வெளியில் உள்ள ஒரு பெரிய மரத்தை ஒரு மர வியாபாரியிடம் (கலாபவன் மணி ) விலை பேசிவிடுகிறார்.  Travel agency -யில்  இறுதிதவணை  செலுத்த ஒருநாள் மீதமிருக்கும் தருணத்தில் மரவியாபாரியிடம் செல்கிறார், வியாபாரி தான் ஒப்புக்கொண்ட பணத்தை அவரிடம் கொடுத்து , தான் இன்று காலை அந்த மரத்தை வெட்டினேன் ஆனால் அது ஒரு உள்ளீடற்ற மரம் (Hollow wood ) ஆனால் இது வியாபாரம் அதனால் நான் ஒப்புக்கொண்ட பணத்தை தருவது தான் நியாயம்  என்கிறார். ஆனால் அபு, "இல்லை மரத்திற்கு தான் நான் இந்த பணத்தை வாங்க முடியும் விறகிற்கு அல்ல, அப்படி வாங்கினால் இந்த ஹஜ் நியாயமானது ஆகாது" என மறுத்துவிடுகிறார் . 50 ஆயிரத்தால் அபுவின் பயணம் தடைபடுகிறது என கேள்விப்பட்ட அவரின் ஆசிரிய நண்பர் (கொடுமுடி வேணு) அந்த பணத்தை இரவோடு இரவாக எடுத்து அபு வின் வீடு செல்கிறார் , ஆனால்  ஹஜ்ஜ் பயணம் எனபது உயிரோடு செய்யும் இறுதியாத்திரை போல , சுயசம்பாத்தியம் அல்லது தனது வாரிசுகள் செய்யும் ஏற்பட்டால் மட்டும் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியம் , கடன் வாங்கி அதை செய்வது தவறு என மறுத்து விடுகிறார். முன்றாவதாக அந்த Travel agency நிறுவனரிடம் சென்று தான் பயணத்தை ரத்து செய்ய கேட்கும்போது , அதன் நிறுவனர் "இந்த ஆண்டு 2500 பயணிகளை தங்கள் நிறுவனம் ஹஜ் யாத்திரைக்கு அனுப்புவதால் உங்களது பணம் எங்களை பாதிக்காது , அதுமட்டுமல்ல என் பெற்றோரும் நான் சிறுவனாக இருந்த போது இதுபோல் ஆசைப்பட்டவர்கள்தான் ஆனால் என்னால் நிறைவேற்ற முடியவில்லை, அதற்குபதில் உங்களை நான் அனுப்பிவைக்கிறேன்"  என்கிறார், ஆனால் அபு உன் பெற்றோரை நினைத்து எங்களை அனுப்புவது அவர்கள் சென்று வந்தது போல, எங்களுடையது ஆகாது இந்த பயணத்தின் வேட்கை எங்கள் ஆன்மாவினுடையது அது என்னால்தான் நிறைவேற்ற படவேண்டும் என அங்கிருந்து  வெளியேறிவிடுகிறார். மிக துயரமாக தம்பதிகள் நாட்களை கடக்கின்றனர், சில நாட்களில் பக்ரித் திருநாள் வந்துவிடுகிறது, அந்நாளில் அதிகாலையில் மசூதியில்  பாங்கு ஒலிக்கிறது,  எழுந்திருக்க மனமில்லாமல் படுத்திருக்கும் அபு திடீரென "ஒரு செயல் நமக்கு தடைபடுகிறது என்றால், ஏதோ  ஒரு தவறு செய்திருக்கிறோம், நம் பயண ஆசைக்காக ஒரு நல்ல மரத்தின் வாழ்வை வெட்டி அழித்திருக்கிறோம்". என்று சொல்லி உற்சாகமாக எழுந்து புதியதாக ஒரு மரக்கன்றை நட்டுவைத்து தொழுகைக்கு நடக்க துவங்குகிறார்.

 இந்தப்படத்தில்  அனைத்து   கதாபாத்திரங்களின்  இயல்பான   நடிப்பு,  பின்னணி இசை, ஒளிப்பதிவு பற்றி இங்கு சொல்வதை காட்டிலும் படம் பார்க்கும்போது நீங்கள் ரசிப்பதுதான் சிறப்பு. என் பார்வையில் இந்த கதை அபு கதாபாத்திரத்தின் மூலம் 3விசயங்களை நமக்குமுன்வைக்கிறது. முதலாவது மர வியாபாரியின் பணத்தை மறுப்பதால், மனசாட்சிக்கு
ஒவ்வாத , நேர்மையை சோதனை செய்யும் ஆதாயத்தை மறுப்பது , இரண்டாவது
நெடுமுடி வேணுவின் பணத்தை மறுப்பதால், தான் பின்பற்றும்/வழிநடக்கும்
வாழ்வியல் / மார்கத்திற்கு மாறானதை செய்யாதிருப்பது, முன்றாவது
Travels அதிபரின் சலுகைகளை மறுப்பதன்முலம் பிறர் ஆசையை, தான்
கடன்வாங்கதிருப்பது. இறுதியில் தன் ஆசைக்கு மரம் வெட்டப்பட்டதை உணர்ந்து
கண்முன் இருக்கும் இயற்கையை அழித்துவிட்டு கடமையென்ற பெயரில்
இறைவனுக்கு செய்வது ஒன்றுமில்லை என்பதை எந்த பிரசாரமும் , நீண்ட
வசனமுமின்றி காட்சியால்  உணரச்செய்திருப்பது அற்புதம்.  படம் முடிந்த பின்னர் பார்வையாளர்களை,   இந்த  சூழல் நமக்கு  நேர்ந்தால் எடுக்கும் முடிவு என்னவாக இருக்குமென வெளிப்படையாக யாரிடமும் பதில்  பகர முடியாத   அடிமன  கேள்விகளை  எழுப்புவது இந்த  படத்தை  ஒவொருவரும் பார்க்க வேண்டிய அவசியத்தை அதிகரிக்கிறது.   
 
யா. பிலால் ராஜா

2 comments:

  1. உங்கள் பதிவு குறித்து வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_10.html

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு. தங்கள் ஆக்கங்கள் மேலும் தொடரட்டும்.
    அன்புடன், ஜீவன்.

    ReplyDelete